212காஞ்சிப் புராணம்


சகமெ லாம்பொடி படுத்தெழுந் தழல்விடம் மிடற்றில்
திகழ வைத்தனன் முப்புரம் எரியெழச் சிரித்தோன்
அகல ருந்திறத் தெண்குணம் அமைந்தபே ராண்மைப்
பகவன் மேன்மைமற் றெம்மனோர் அளவிடற் பாற்றோ.   55

     உலகங்கள் அனைத்தையும் நீறாக்கிஎழுந் தீயை ஒக்கும் விடத்தைக்
கண்டத்தில் விளங்க வைத்தனன் முப்புரம் தீயில் மூழ்கச் சிரித்த பிரான்
எஞ்ஞான்றும் நீங்காத எண்குணங்கள் நிறைந்த பெருஞ் சேவகம் நிரம்பிய
பகவனின் மேம்பாடு எம்மனோரால் வரையறுக்கப்பெறும் இயல்பினதோ.

     ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு
குணங்களையும் உடையவன் பகவன் எனக் கூறுவர்,

கந்த ரத்திடை அடக்கிய கறைவிடங் காணூஉச்
சுந்த ரத்திரு மாலயன் சுராசுரர் முனிவர்
இந்தி ராதியர் கவலைதீர்ந் தெண்ணருங் களிப்பால்
சிந்தை அன்பொடும் அஞ்சலி சென்னிமேற் கொண்டு.  56

     திருக்கழுத்தில் அடக்கிய கறுப்பு நிறமாகிய விடத்தைக் கண்டு அழகிய
திருமகள் நாயகனும், பிரமனும், சுரரும், அசுரரும், முனிவரும், இந்திரன்
முதலானோரும் துயரம் தவிர்ந்து நினைப்பரிய களிப்பினாலே சிந்தையில்
எழுந்த அன்புடனே குவித்த கரங்களைத் தலைமேற்கொண்டு,

நீல கண்டனே போற்றிஎண் குணங்களால் நிறைந்த
மூல காரணா போற்றிமுன் சிறுவனுக் கிரங்குங்
கால காலனே போற்றிஇன் றெம்முயிர் காத்த
ஏல வார்குழல் பங்கனே போற்றிஎன் றிசைத்தார்.   57

     ‘திருநீலகண்டனே போற்றி; எண்குணங்களால் நிரம்பிய மூலகாரணா
போற்றி; முன்னர் மார்க்கண்டேயர்க்கு இரங்குங் காலனுக்குக் காலனே
போற்றி: இன்று எங்கள் உயிரைக் காத்த ஏலவார்குழலி பங்கனே போற்றி’
என்றியம்பினர்.

     சிவபுண்ணியப் படலத்துள் நீலகண்டர் திருவுருவப்பாடலைக் காண்க.

என்ற போதருள் சுரந்துமக் காற்றல்இன் றளித்தேம்
தொன்று போற்கடல் கடைந்துவான் சுவைஅமிழ் துண்பீர்
பொன்றி லீரெனத் திருவருள் புரிந்தனன் புனிதன்
ஒன்று பின்னரும் வேண்டுவர் மால்முதல் உம்பர்.    58

     என்று துதித்தபோது புனிதன் கருணை கூர்ந்து ‘உங்கட்குக் கடல்
கடைந்திடும் ஆற்றலை இப்பொழுது நல்கினோம். முன்புபோல நீவிர்
அக்கடலைக் கடைந்து உயர்ந்த சுவையுடைய அமிழ்தம் பெற்று
உண்பீர்; அதனால் நெடுங்காலம் அழிவிலீர்’ எனத் திருவருளைப்
புரிந்தனன். பின்னரும் திருமால் முதலானோர் ஒன்றனை வேண்டுவர்.