224காஞ்சிப் புராணம்


     ‘‘சிவபிரானைப் பூசனை செயாதவர் எவரே?’’ ஒருவருமிலர்.
அச்சிவபிரான் வேறெத்தேவரையாயினும் வழிபாடு செய்ததுண்டோ?’’ இல்லை,
‘‘மனக்கருத்து இனி இரட்டுறாது யாம் எல்லோமும் உள்ளம் அன்பு பட்டு
அப்பெருமான் இரு திருவடித்தாமரை மலர்களையே புகலாக அடைவேம்’’
என்றுகூறி,

விடையவன் வென்றியை வியாசர் வகுத்தல்

பவள முண்டகக் கிழத்திதோய் பணைப்புயக் குரிசில்
தவள மேனியை நீனிறம் ஆக்கிவெண் சலதி
துவள வந்தெழும் கொடுவிடம் மிடற்றினில் தூங்கக்
கவளம் ஆக்குநின் பெருமையார் கணித்திட வல்லார்.    29

     ‘‘பவளம் போலும் நிறமுடைய செந்தாமரை மலரைக் காணியா உடைய
திருமகள் தோய் திரட்சியையுடைய புயத்தினைக் கொண்ட தோன்றலாகிய
மாலின் வெண்ணிற மேனியை நீலநிறம் ஆக்கிய பாற்கடல் கெட எழுந்த
கொடிய விடத்தினைக் கண்டத்தில் தங்க உணவாக அமைக்கும் நினது
பெருமையை யாவரே வரையறுத்து மதித்திட வல்லவர் ஆவர்.’’

சிரித்தெ ரித்தனை முப்புரம் திறற்சமன் வாழ்நாள்
இரித்த ழித்தனை உதையினில் இலங்கையார்க் கிறையை
நெரித்து வீழ்த்தினைபெருவிரல் நுதியினின் நீறாப்
பொரித்து விட்டனை காமனைப் பொறிநுதல் விழியால்.  30

     ‘‘திரிபுரங்களைப் புன்சிரிப்பால் எரித்தனை. வலிமை பொருந்திய
இயமனைத் திருவடியால் உதைத்து வாழும் நாள் கெடுத்தனை; காற்
பெருவிரல் நுதியினால் கைலைமலையைச் சிறிதே அழுத்தி இராவணனை
நசித்து விழ வீழ்த்தினை; மன்மதனை நெற்றிக்கண் தீயினால் நீற்றினை’’;

பிரம னார்சிரம் உகிரினிற் பேதுறக் கொய்தாய்
சுரர்கள் யாரையும் சிறுவிதி வேள்வியில் தொலைத்தாய்
நரம டங்கல்மீன் வாமனன் கூர்மம்நற் கேழல்
உரமெ லாம்அறத் தடிந்தனை ஒவ்வொரு கூற்றால்.   31

     பிரமன் வருந்த அவனது சிரத்தை நகத்தினாற் கொய்தனை; தேவர்கள்
யாவரையும் தக்கன் வேள்வியில் தகர்த்துத் தொலைவு செய்தனை; திருமால்
கொண்ட அவதாரங்களாகிய நரசிங்கம், மச்சம், ஆமை, பன்றி இவற்றை
வன்மை முழுதும் கெட வீட்டினை; வாமன மூர்த்தியை அழித்தனை.

அந்த கன்றனை மாயனைச் சூலமீ தமைத்த
எந்தை நின்பெருந் தகைமையான் என்னறிந் திசைப்பேன்
சிந்தை மையலில் தொழுத்தையேன் செய்பிழை பொறுத்தே
உந்து பேரருட் கருணையால் உய்வகை அருளாய்.      32