வியப்பு: பலர் ஓர் கன்னியை மணத்தலும், புலிகள் யாட்டொடு உறவு கொள்ளுதலும், காளைகள் சிங்கத்தின் மேல் ஏறுதலும், அன்னங்கள் இடபத்தை விழுங்குதலும் ஆகும். வில்ல லர்ந்தபல் உடுக்களும் விண்நெறிப் படருஞ் செல்லும் வெண்கதிர்க் கடவுளும் பானுவுந் திறல்சால் மல்லல் வானவக் குழுவும் எய்ப்பாறவந் திருக்கும் இல்லம் எங்கணும் வான்தொட இழைத்திடுங் குன்றம். 48 | ஒளி மலர்ந்த பல நட்சத்திரங்களும், வான் வழிச் செல்லும் மேகங்களும், சந்திரனும் சூரியனும் வன்மையமைந்த தேவர் குழாமும் இளைப்பாற வந்து இருத்தலைச் செய்யும் தேற்றா மரத்தை வான்தோய எவ்விடத்தும் வளர்க்கும் குன்றங்கள். வியப்பு: மலைகள் மனைகள் இயற்றும். போது மூன்றினும் போதுசெய் காவிசூழ் பொருப்பும் மேத குந்தமிழ்க் கெல்லையாம் வேங்கட வரையும் காதல் பூப்பஅத் தாணிகொண் டறுமுகக் கடவுள் கோது நீத்தர சாட்சிசெய் குறிஞ்சிஅக் குறிஞ்சி. 49 | காலை, நண்பகல், மாலை ஆகிய இம் மூன்று பொழுதுகளினும் மலர் தலையுடைய நீலோற்பலச் சுனையையுடைய தணிகை மலையும், மேன்மை தங்கிய தமிழ்க்கு வடக்கு எல்லையாகிய திருவேங்கட மலையும், காமுற அத்தாணி மண்டபமாகக் கொண்டு அறுமுகப் பெருமானார் குற்றம் நீக்கி அருளாட்சிசெய் மலைகளைக் கொண்ட குறிஞ்சி அக்குறிஞ்சி. முப்போது மலரும் குவளை இந்திரன் கொணர்ந்தனன், முருகனுக்குச் சாத்திவழிபாடு செய்தனன். இதனைக் கந்தபுராணத்துட் காண்க. ‘‘காலைப் போதினி லொருமலர் கதிர்முதி ருச்சி வேலைப் போதினி லொருமலர் விண்ணெலாம் இருள்சூழ் மாலைப் போதினில் ஒருமல ராகஇவ் வரைமேல் நீலப் போதுமூன் றொழிவின்றி நித்தலு மலரும்’’ | அன்பெ லாம்ஒரு பிழம்பெனத் திரண்டகண் ணப்பன் எம்பி ராற்கொரு விழியிடந் தப்புகா ளத்திப் பொன்பி றங்கிய முகலிசூழ் கயிலையம் பொருப்புந் தன்பு லத்திடை யுடையது தடவரைக் குறிஞ்சி. 50 | பேரன்போர் வடிவாய்நின்ற திருக் கண்ணப்ப நாயனார் எமது பெருமானார்க்குத் தமது விழியிடந்தப்புதற்கு இடனாய் விளங்கிய பொன் முகலியாறு சூழ் திருக்காளத்தி மலையையும் கொண்டது அக்குறிஞ்சி. |