246காஞ்சிப் புராணம்


     சுபருணை தன்னைச் சிறையினின்றும் விடுதலை செய்யென
வேண்டுகையில், நேரிழாய்! எண்ணில் மூன்றாவதாகக் கூடுகின்ற
விண்ணிடைக் குளிர்ந்த சந்திரனிடத்துத் தோன்றும் அமிழ்தம் தேவர்கள்
பெருங் காவலிலுள்ளது.

     மூன்றாம் விசும்பு; ‘‘நிலமீதும் அந்தரத்தும் நெறிதாழ் கூந்தல்
அரம்பையர் வாழ், புலமீதும்’’ (கயிலாயப்படலம்) என வருதல் காண்க.
தேவர் சந்திர கிரணத்தை உண்பரெனல்; ‘‘பிறைவளர் நிறைமதி உண்டி
அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு’’ உலகு பயம் பகர ஓங்கு பெரும் பக்கம்,
வழியது பக்கத் தமரருண்டி மதி.’’ (பரிபாடல்)

அதுகொ ணர்ந்திங் களித்துநின் வெஞ்சிறை
விதுமு கத்தி விடுவித்துக் கொள்ளெனக்
கதிர்செய் பூண்முலைக் கத்துரு கூறலும்
மதிஅ ழிந்து வருந்திச் சுபருணை.               6

     ‘முழுமதி முகத்தி! இங்கு அவ்வமுதத்தைக் கொணர்ந்து கொடுத்து
நின் கடுங்காவலை விடுவித்துக்கொள்க’ என்று ஒளி வீசுகின்ற அணிகளை
அணிந்த கத்துரு கூறிய அளவிலே சுபருணைகேட்டு அறிவழிந்து வருந்தி,

கருடன் பிறத்தல்

ஆசில் மெய்த்தவம் ஆற்றி அரும்பெறற்
காசி பன்அருள் பெற்றுக் கலுழனை
மாசி லாத மகவென ஈன்றனள்
பேசி னாள்அம் மகற்கிது பெற்றியே.             7

     குற்றமற்ற மெய்த்தவமாகிய சிவார்ச்சனை புரிந்து பெறற்கரிய
காசிப முனிவர் அருளால் கருடனைக் குற்றமற்ற நன்மகவென ஈன்று
அம்மகனிடத்துத் தன்னியல்பை விளக்கினாள்.

     பூசனை தவம்; ‘‘ தவமுயல்வோர் மலர் பறிப்ப’’ (திருஞா. கழுமலம்
மேகராகக் குறிஞ்சி).

கேட்டெ ழுந்து கிளர்ந்து விடைகொடு
கோட்ட மில்புட் குலத்தர சன்னைதன்
வாட்டம் நீப்ப வலிந்து கடுகிவிண்
நாட்டின் இன்னமிழ் துற்றுழி நண்ணினான்.        8

     மாறுபாடில்லாத கருடன் தன் தாய் சொற்கேட்டு எழுச்சியொடெழுந்து
அவள் வருத்தத்தைத் தவிர்ப்ப மிக விரைந்து பறந்து விண்ணுலகில்
அமிழ்தம் உள்ள இடத்தை அடைந்தனன்.

அங்கண் வைகிய காவல ராயினார்
தங்கள் வீரந் தபப்பொரு தேற்றெதிர்
வெங்கண் வெண்கய வேந்தனை ஓப்பினான்
பொங்கு வேகப் பொலஞ்சிறைக் காற்றினால்.       9