248காஞ்சிப் புராணம்


கூறிய வாக்குப் பொய்த்திலை எனின் எனக்கு வாகனமாகப் பொருந்தும்
இவ்வரத்தை யான் கொள்ளுமாறு நல்குக’ என்றனர்.

     வஞ்சம் புரிதலின், மாயன் என்றனர். ‘மாயன் மாயத்துப்பட்ட மனத்தரே’
(திருநாவுக்.)

ஆர்த்தி கூர்தர அம்மொழி கேட்டொரு
மூர்த்தம் எண்ணி உயிர்த்து மொழிந்தமெய்
வார்த்தை யிற்பிறழ் வஞ்சிஅற் றாகெனச்
சீர்த்தி யாளன் விடைபெற்றுச் சென்றனன்.       14

     வருத்தம் மிகும்படி அம்மொழியைக் கேட்டு ஒரு முகூர்த்த நேரம்
நினைந்து வெய்துயிர்த்துச் சொல்லிய மெய் வார்த்தையில் மாறுபடற்கு
அஞ்சி அவ்வாறாகுக என்று மிகு புகழோன் விடைபெற்றுச் சென்றனன்.

     உயிர்த்து-பெருமூச்செறிந்து எனினுமாம். தன்னைக் கொடுத்தமையின்
இசைவு பெற்றுச்சென்றனன் ஆதலின் ‘விடைபெற்று’ என்றனர்.

கருடன் வரம் பெறல்

மறுவில் கத்துரு மாட்டுச் சுதைக்குடங்
குறியெ திர்ப்பை கொளக்கொடுத் தன்னையைச்
சிறையின் நீக்கினன் சீறர வங்கள்பால்
கறுவு செய்து கொலைசெயுங் காதலான்.           15

     குற்றமில்லாத கத்துருவினிடத்தில் அமிழ்துடைக் குடத்தை விலையாகக்
கொடுத்துத் தன் தாயை விடுதலை செய்து சீற்றம் கொள்கின்ற பாம்புகளொடு
பகை கொண்டு வயிரமுற்றுக் கொலை செய்யும் விருப்பினான்.

     குறி எதிர்ப்பு: பெற்ற அளவிற்கு ஒப்ப எதிராகக் கொடுப்பது. கறுவு-
வயிரம். (திருநாட். 85)

     கச்சி வைப்பினை எய்திஆ தீபிதக் கடிநகர் வடகீழ்பால்,
நச்சும் அன்னைதன் சிறைக்குவீ டருளும்முத் தீசனை நயந்தேத்தி,
இச்சை யாற்றினிற் பெற்றனன் எறுழ்வலிப் பணிக்கூட்டம், அச்ச
முற்றிடச் சிறகெழு வளியினில் அலைத்தெழு புள்வேந்தன்.       16

     கச்சி மாநகரை அடைந்து ’ஆதீபிதம்’ என்னும் விளக்கமமைந்த
தலத்திற்கு வடகிழக்கில் விரும்புகின்ற தன் தாயாகிய சுபருணைக்குச்
சிறையினின்று விடுதலையை மகவால் அருளிய முத்தீசப் பெருமானை
விரும்பித் துதி செய்து விருப்பப்படி பெரு வரங்களைப் பெற்றனன்.
பெருவன்மையுடைய பாம்பின் கூட்டங்களை அச்சம் மிகும்படி சிறகிடை
வெளிப்படு காற்றினால் வருத்தி எழுகின்ற பறவை அரசனாகிய கருடன்.