திருநாட்டுப்படலம் 25


நாவல் மன்னவர்க் கிரந்துசோ றளித்திடு நம்மான்
தேவி யோடமர் திருக்கச்சூர் திருவிடைச் சுரமும்
பாவ காரியர் எய்தொணாக் கழுகுசூழ் பறம்பும்
மேவ ரத்திகழ் குறிஞ்சியின் பெருமையார் விரிப்பார்.    51

     சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிச்சை ஏற்று அவ்வுணவை அளித்த
பெருமான் எழுந்தருளுதற்கிடனாகிய திருக்கச்சூரும், திருவிடைச் சுரமும்,
புண்ணியர் எய்துதற்குரிய திருக்கழுக்குன்ற மலையையும் தன்னுட் கொண்டு
திகழ் குறிஞ்சியின் பெருமையை யாவர் விரித்துரைப்பார்?

பாலை

குராவ ளித்திடு பாவையைக் கோங்குபொன் கொடுத்துப்
பராரைப் பாடலம் பூந்தழற் பாங்கரின் மணப்ப
மராம ரத்துளர் வண்டுபண் பாடவன் முருங்கை
விராவி வெண்பொரி இறைத்திடும் வியப்பின தொருபால்.   52

     கோங்கமரம் பொன் கொடுத்துக் குராமரம் ஈன்ற: பாவையைப் பருத்த
அடியினையுடைய பாதிரி (வேள்வி முன்போல) முன் மணந்து கொள்ள,
வெண்கடப்ப மலரில் திரிகின்ற வண்டு பண் இசைப்ப வலியில்முருங்கை
மலராகிய வெண்பொரியை உளங்கலந்து வீசும் வியப்பினது ஒருபுறம்.

     வன்முருங்கை-வன்மை கெட்டது என்னும் பொருளில் வந்தது.
பாலையில் உள்ள மரங்களைக் கொண்டு திருமண நிகழ்ச்சி சித்திரிக்கிறார். 

எயிற்றி மார்எழில் நலத்தினுக் கிரியல்போ யுடைந்தாங்
கயற்பொ தும்பர்புக் கலர்குராப் பாவைகண் டவர்தந்
துயிற்று சேயெனக் கவன்றுபோய்த் தூதுணம் புறாக்கள்
வெயிற்ற லைக்கணின் றுயங்குவ நிலைமைவிண் டவர்போல்.  53

     தூதுணம் புறாக்கள். பாலை நிலப்பெண்களின் பேரழகினுக்குப்
பெரிதும் தோற்றோடி (புறங்கண்டு) அடுத்துள்ள சோலையிற் புகுந்து,
குராமரப்பாவைகளை அவர் தம்முடைய குழந்தைகள் உறங்குவனவாகக்
கண்டு கவலை கொண்டு வெளியேறி வெயிலில் நின்று, நிலை கெட்டவர்
போல வருந்தும்.

     நண்பகலாகிய முதற்பொருளும், குரா என்னும் மரமும், தூதுணம்,
புறா என்னும் பறவையுமாகிய கருப்பொருள்களும் வந்தன.

தூது ணம்புற வினமெலாந் துணையுடன் கெழுமிப்
போத ஊடியும் உணர்த்தியுந் தலைத்தலைப் புணர்ந்து
காதல் அந்நலார் மொழியையுங் கடந்துசே ணிடைச் செல்
ஏதில் ஆடவர் தமைச்செல வழுங்குவித் திடுமால்.       54

     தலைவியர் மொழியைக் கடந்தும் சேணிடைப்பிரிந்து செல் தலைவர்
பாலை நிலவழிச் செல்வுழி, ஆங்காங்குத் தூதுணம் புறாக்கள் தத்தம்.