பாம்புகளை அணிகலன்களாகத் தரித்தனன் ஆகலின், பாம்பா பரணனுடைய இனிய அருளைப் பெறும் வலிமையால் அப்பாம்புகள், இறைவனிடத்தே திருமாலோடும் வந்த கொடிய பகையையுடைய கருடனைக் ‘கருடனே சுகமோ’ என்றச்சமின்றி மேன்மையின் வினாவிய இதனைப் பாரெலாம் பலகாலும் எடுத்துப் பாராட்டும். பாம்புகள் வினாதல்: ‘‘மெலியோர் வலிய விரவலரை அஞ்சார், வலியோர் தமைத்தாம் மருவில்-பலியேல், கடவு ளவிர்சடைமேற் கட்செவி அஞ்சாதே, படர்சிறையப் புள்ளரசைப் பார்த்து’’ நன்னெறி. சிறிய ராயினார் சார்பினை விழையன்மின் திறல்கெழு பெரியோராம், அறிஞ ராயினார் சார்பினை விழைமினோ அலரிதழ் விரிகொன்றை, வெறிந றுந்தொடை எம்பிரான் சார்பினை விழைதலால் உரகங்கள், மறுவில் ஆற்றல்சால் கலுழனை வினாயின வாழ்ந்தனை யோவென்ன. சிறியராவார் சார்பினை விரும்பேன்மின்! வலிமை பொருந்திய பெரியோர் ஆகும் அறிஞர் தொடர்பினை விரும்புமின்’ பாம்புகள் இதழ் அலர்ந்து விரிகின்ற கொன்றையின் நறுமணங்கமழும் மாலையை அணிந்த எமது பெருமான் சார்பினை விரும்புதலால், குற்றமற்ற வலிமை நிரம்பிய கருடனை ‘நல்வாழ்க்கையையோ? என்ன வினாவின. பவளச் செந்தளிர் நீட்டிய பைம்பொழிற் பணாதரேச் சரவைப்பிற், குவளைக் கண்ணியோ டுயிர்க்கெலாம் இன்னருள் கொழித்து வீற் றிருந்தோங்கும், கவளக் கைவரை உரித்தவன் இக்கதை கற்றவர் கேட்டோர்க்கும், தவளப் பூதிகொள் மேனியீர் வெம் பணித் தழல்விடம் அணுகாதால். 7 பவளம் போலும் சிவந்த தளிரைக் காலுகின்ற பசிய சோலைகள் சூழ்ந்த பணாதரேசத்தில் நீலோற்பல மலரனைய கண்ணியோடும் உணவு கொள் கைம்மலையாகிய யானையை உரித் ததன் தோலைப் போர்த்தவன் ஆன்மாக்களுக்கெல்லாம் திருவருள் செழிக்கச் செய்து வீற்றிருந்து விளங்குவன். வெண்மையான விபூதியை அணிந்த திருமேனியை யுடையீர்! இக்கதையைக் கற்றவர்க்கும் கேட்டோர்க்கும் கொடிய பாம்பின் தீய விடம் அணுகாது. பணாதரேசப் படலம் முற்றிற்று, ஆகத் திருவிருத்தம் 821. |