ஒற்றை ஆழியங் கொடிஞ்சி வையமீ தொளிப ரப்பிவீங் கிருள்து மித்தெழுங், கற்றை வெங்கதிர்க் கடவுள் நாளினும் கருமுடத்திறல் காரி நாளினும், எற்று தெண்டிரைச் சித்த தீர்த்தநீர் எய்தி ஆடிஅவ் வேந்தல் தாள்தொழும், கொற்ற வாழ்வினார்க் கெழுபி றப்புநோய் கோடி யோசனைக் கப்புறத்ததே. 4 ஒற்றைச்சக்கரமமைந்த கொடிஞ்சி என்னும் உறுப்பினையுடைய தேர்மிசையிருந்து ஒளியைப்பரப்பிச் செறிந்த இருளை அழித்தெழும் தொகுதியும் வெம்மையும் கொண்ட கிரணங்கள் மருவிய சூரியனுக்குரிய நாளினும், கரிய நிறமும், கால்முடமும், வலிமையும் கூடிய சனிக்குரிய நாளினும் மோதுகின்ற திரை எழுகின்ற சித்ததீர்த்த நீராடி அச்சித்தீசரை வணங்கும் வெற்றி அமைந்த வாழ்வினையுடையவர்க்குப் பிறவி நோய் கோடியோசனைக் கப்புறத்தது ஆகும். சித்ததீர்த்தம் பிறவிப்பிணிக்கு மருந்தாம் என்க. மூழ்குதற்குரிய காலம் ஞாயிறு, சனிக்கிழமைகள் என்க. கொடிஞ்சி-தாமரைப்பூவடிவிற் செய்து தேர்த்தட்டின் முன் நடுவது. சித்தீசப் படலம் முற்றிற்று. ஆகத் திருவிருத்தம் 839 அரிசாப பயந்தீர்த்த தானப் படலம் எண்சீரடி யாசிரிய விருத்தம் புரிமு றுக்குடைந் தவிழ ஆறடிப் புள்மு ரன்றுவாய் மடுக்கும் இன்னறை, விரிம லர்த்தடம் புடைஉ டுத்தசித் தீச மேன்மையின் விளைவி யம்பினாம் உரிய மற்றதன் உத்த ரத்துறும் உவண ஊர்தி ஆச்சிரம வைப்பினில், திரிவி லாஅரி சாப வெம்பயந் தீர்த்த வானவன் சீர்த்தி கூறுவாம். 1 சுருளாகிய கட்டு நெகிழ்ந் தவிழ அறுகாலையுடைய வண்டுகள் ஒலித்து வாய் பருகும் இனிய தேன் பரவு மலர்களையுடைய தடாகங்கள் பக்கங்களிற் சூழ்ந்த சித்தீசப் பிரான் திருவருட் செயலை விளம்பினோம். அதற்கு வடக்கில் திகழும் கருடவாகனமுடைய திருமால் ஆச்சிரமத்தில் தப்பாத அரிசாப கொடிய பயத்தைத் தீர்த்த சிவபிரானுடைய மிகுந்த புகழைக் கூறுவாம். |