செப்பு முன்னைநாள் அதிதி மைந்தருந் திதியின் மக்களும் இடைய றாதுபே, ரப்பு மாரிபெய் தெண்ணில் ஆண்டுகள் அழுக்கறுத்துவெஞ் சமர்இ யற்றுழி, மைப்பு றுத்தகண் அரம்பை மார்முலை உழுத மார்பினார் வலிஇ ழத்தலும், துப்பெ றிந்தபூங் கமல வாள்விழித் தோன்றல் எய்திவெம் படைவி திர்த்தனன். 2 முன்னோர் காலத்தில் அதிதியின்மைந்தர் எனப்பெறும் தேவரும். திதியின்மைந்தரெனப் பெறும் அசுரரும் பொறாமையுற்றுப் பேரம்பு மழையைச் சொரிந்து அளவிலாத வருடங்கள் இடையறாது போர் புரிந்த வழி, மைதீட்டிய கண்களையுடைய அரம்பையர் கொங்கை தோயும் மார்பினை யுடைய தேவர் வன்மை இழந்த அளவிலே செவ்வொளி வீசுகின்ற தாமரை மலரை ஒத்தஒளி பொருந்திய கண்களையுடைய திருமால் எய்திக் கொடிய சக்கரத்தைச் சுழற்றினன். எஞ்சு தானவர் அஞ்சி ஓட்டெடுத் திருமை யோகுசெய் பிருகு மாமுனி, தஞ்ச மாமனைக் கிழத்தி பூமகள் தாயெ னப்படுங் கியாதி தன்புடை, வஞ்சம் இன்றிவந் தடைக்க லம்புக வருந்து றேன்மினென் றபய நல்கிஅப், பஞ்சின் மெல்லடிப் பாவை ஆச்சிரமத்தின் உள்ளுறப் பாதுகாத்தனள். 3 தோல்வியுற்ற அசுரர் புறங்கொடுத் தோடிப் பெருமை பொருந்திய யோகத்தைச் செய்கின்ற பிருகு மாமுனிவரரைப் பற்றுக் கோடாக உடைய அவர்தம் வாழ்க்கைத் துணைவியும் இலக்குமிக்குத் தாயுமான கியாதியினி டத்துப் புறக்கணியாது காப்பரெனத் துணிந்து வந்து சரணடைய ‘வருந்தற்க’ என்றடைக்கலம் ஏற்றுச் சுகுமாரத் தன்மையுடைய அப்பாவை போல்வாள் ஆச்சிரமத்தில் மறைவிடந்தந்து பாதுகாத்தனள். சீற்றம் மிக்கெழச் சேந்த கண்ணினான் திகிரி ஓச்சிஅங் கெய்து மாதவன், போற்றி வாய்தலின் வைகு மாமியைப் பொருக்கெனச்சிரந் துணித்து வீழ்த்தலும், ஏற்றெ ழுந்தகூ கூஒ லித்திரள் இருசெ வித்துளை ஏறு மாமுனி, மாற்ற ருந்திறல் யோகு நீங்கிமுன் மனைவி பட்டதும் மற்றும் நோக்கினான். 4 கோபம் பொங்கி எழுதலினால் சிவந்த கண்களையுடையவனாய்ச் சக்கரத்தைச் சுழற்றிக் கொண்டங் கெய்திய திருமால் பாதுகாப்பாகத் தலைவாயிலில் தங்கும் தனது மாமியின் சிரந்தன்னை விரைய வெட்டி வீழ்த்தியபோது மிக்கெழுந்த கூகூ என்னும் ஒலிப்பெருக்கம் இருசெவிகளின் துளைவழி ஏற்ற மாமுனிவரர் போக்கரிய வலிமையமைந்த யோக நீங்கி மனைவி சக்கரத்தால் எறியப்பட்டதும் பிறவும் நோக்கினர். |