சுரகரேசப் படலம் எண்சீரடி யாசிரிய விருத்தம் தாண்டவம் ஆடுதல் வல்ல பெம்மான் தங்குஞ் சகோதர தீர்த்தப் பாங்கர், மாண்டகன் னீசம்வன் னீசம் விண்ணும் மண்ணும் புகழுஞ் சவுன கேசம், ஈண்டு விளங்க எடுத்து ரைத்தாம் எம்மையும் நல்கிடுஞ் சவுன கேசத், தாண்டகை வைப்பின் வடக்கண் மேவும் அண்ணற் சுரகரம் பன்னு கிற்பாம். 1 சகோதர தீர்த்தக் கரையில், தாண்டவம் புரிய வல்ல தம்பிரான் எழுந்தருளியுள்ள மாட்சிமை பொருந்திய கன்னீசம், வன்னீசம், விண்ணவரும் மண்ணவரும், புகழ்ந்து போற்றும் சவுனகேசம் எனப்பெறும். தலங்களின் வரலாறுகளை இவ்விடத்து விளக்கினோம். இனி, இம்மை மறுமை, முத்தி ஆகிய நலங்களை அருள் செய்யும் சவுனகேசப்பெருமான் எழுந்தருளியுள்ள தலத்திற்கு வடக்கில் மேவும் பெருமையுடைய சுரகரேச வரலாற்றினைப் பாராட்டிக் கூறுவாம். ‘தாண்டவம் புரிய வல்ல தம்பிரா னார்’ (திருத். அப்பூதி.1) மந்தரமலைச் சிறப்பு கலி விருத்தம் சுந்த ரத்திரு மால்முதற் சூழ்சுடர் அந்த ரத்தவர்க் காரமு தீந்தது கந்த ரத்து முனிக்கணம் யோகுசெய் மந்த ரப்பெயர் மால்வரை உண்டரோ. 2 | அழகிய திருமகள் நாயகனாகிய மால் முதலான சுடர் சூழ்கின்ற விண்ணவர்களுக்கு அரிய அமுது பெற மத்தாக விளங்கியதும், குகைகளில் முனிவர் குழாங்கள் யோகம் செய்தற் கிடனாயதும் ஆகிய மந்தரம்’ எனப் பெருமை பொருந்திய மலை உள்ளது. சுற்றும் யாளி முழைதொறுந் துஞ்சுவ வெற்றி மத்தென வேலை கடைந்தநாள் அற்றம் நீக்கும் அமுதம் இடைஇடைப் பற்றி நின்றிடும் பான்மை நிகர்க்குமால். 3 | திரிதரும் யாளிகள் குகைகள் தோறும் உறைதல் வெற்றிக்கு ஏதுவாகிய மந்தரம் மத்தாகப் பாற்கடலைக் கடைந்த நாளில் குற்றத்தைப் போக்கும் அமுதம் இடை இடையே பற்றி நின்றிடும் பரிசினை ஒக்கும். மத்திற் படியும் வெண்ணெயை ஒக்கும் யாளிகள் என்க. அற்றம் நரை, திரை, மூப்பு. |