தித்தித்தது, வினைமுற்றுப் பெயர். திதித்த தென்னும் வினை முற்று வினை எச்சமாய்த் துதித்த தென்னும் முற்று வினையைக்கொண்டு முடிந்தது. யானைக்கொம்பு முதலியவை குறிஞ்சிக் கருப் பொருளாதலானும், அந் நிலத்துள்ள புனத்தின் சிறப்புக் கூறுதலானும் அத்தித்து துத்தித்து என்னும் குறிப்பு வினைமுற்றுப் பெயர்கள் கொம்பையும் மணியையும் உணர்த்தின. துத்தி, இருமடியாகு பெயர். துத்தி-படப்பொறி. அது படத்தையுணர்த்தித் தானி யாகு பெயராய்த் தலையை யுணர்த்திற்று. உதித்து, செயவெ னெச்சத்திரிபு. தத்து, படு விகுதி குன்றி வந்த செயப்பாட்டு வினையெச்சம், ததைத்து, மெல்லொற்று வல்லொற்றாய் வந்த பிறவினை எச்சம். கோமூத்திரி வான ளாவின வார்கனி யாவிரை கான றாவிள வார்கடி யாவரை தேன லம்பின தீங்கட மாருமான் தான வம்பன றாங்கெட வூருமால். 12 | இரண்டிரண்டு வரியாக ஒரு செய்யுள் எழுதப்பட்டு மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே வருவது. வான் அளாவின வார் கனி ஆவிரை-ஆகாயத்தை யளாவிய நீண்ட கனிகளையுடைய ஆவிரையும், கான் அறா விள ஆர் கடியா வரை-வாசனை நீங்காத விளா மரமும் ஆத்தி மரமும் நீங்காத அம்மலையின் கண்ணுள்ள, தேன் அலம்பின தீம் கடம் ஆரும் மான் தானம் அம்பு-வண்டுக ளாரவாரிக்க இனிய மதம் நிறைந்த யானைகளின் மத நீரானது, அனல் தாம்கெட ஊரும்-(புனங்களிற் பற்றிய) நெருப்பு அவியச்செல்லும். ஆல், அசை, தாம் சாரியை. கூட சதுக்கம் கந்த மல்கிய காவிற் குலாய்க்கமழ்ந் தந்தி மானு மவிர்தளிர்க் கொக்குதிர் செந்து வர்க்கனி தித்திக்கு மாசினி மந்தி மாந்தி மகிழ்ந்து குதிக்குமால். 13 | ஈற்றடி எழுத்துக்கள் ஏனை முன்றடியுள்ளும் கரந்துநிற்க வருவது கூட சதுக்கம். கூடம்-மறைவு. சதுக்கம்-நான்காவது. கந்தம் மல்கிய காவில் குலாய்-வாசனை நிறைந்த சோலையின் கண் குலவி, கமழ்ந்து அந்தி மானும் அவிர் தளிர் கொக்கு உதிர் செம்மை துவர் கனி-வாசனை வீசி வண்ணத்தாற் செவ்வானத்தை நிகர்க்கும் விளங்குந் தளிரையுடைய மாமரத்தினின்றும் உதிர்ந்த சிவந்த பவளம் போன்ற கனியையும், தித்திக்கும் ஆசினி-தித்தியா நின்ற ஈரப்பலாவின் கனியையும், மந்தி மாந்தி மகிழ்ந்து குதிக்கும்-பெண் குரங்குகள் புசித்துக் களிகூர்த்து குதித்து விளையாடும். அந்தி மானுந்தளிர், பண்பு பற்றி ஒரு பொருளோடு பல பொருள் வந்த உவமை அணி. |