திரிபங்கி காப்பியக் கலித்துறை சந்தன மார்-தடஞ் சாரலெ லாம்-தனி வானளவுங் கொந்தலர் வீ-நெடுங் காவினெ லாம்-குனி மாந்தருவின் நந்திய தேன்-படுஞ் சூழலெ லாம்-நனி மாந்தர்விழை கந்தநி லாம்-கடந் தாழ்கரி போம்-கனி வீழ்ந்தழியும். 24 | ஒரு செய்யுளாய் உறுப்பமைந்து ஒரு பொருள் பயப்பதனை, மூன்றாகப் பிரித்து எழுத, வெவ்வேறு செய்யுளாய்த் தனித்தனியே பொருள் பயந்து, தொடையுங் கிரியையும் தனித்தனியே பொருள் பயந்து, தொடையுங் கிரியையும் தனித்தனியே காண வருவது திரிபங்கி. சந்தனம் ஆர் தடம் சாரல் எலாம் நனி மாந்தர் விழை கந்தம் நிலாம்- சந்தன மரங்கள் நிறைந்த விசாலித்த மலைப் பக்கங்களெல்லாம் மிகவும் மனிதர் விரும்பும் மலர் வாசனை விளங்கும், தனி வான் அளவும் கொந்து அலர் வீ நெடுமை காவின் எலாம் கடம் தாழ் கரிபோம்-ஒப்பற்ற ஆகாயத்தை யளாவிய பூங்கொத்தின்கண் அலர்ந்த பூக்களையுடைய நெடிய சோலைகளி லெல்லாம் மதமொழுகா நின்ற யானைகள் சஞ்சரிக்கும், சூழல் எலாம் குனி மாந்தரு இன் நந்திய தேன் படும் கனி வீழ்ந்து அழியும்- அம்மலையினிட மெல்லாம் (கனிப் பொறையால்) தலைவளைந்த மாமரங்களினது மிகுந்த தேன்பொருந்தியகனிகள் சிந்தி அழியும். சாரலெலாம், காவினெலாம், சூழலெலாம் என நிறுத்தி, கந்தம் நிலாம், கரிபோம், கனி வீழ்ந்தழியும் என்பவற்றை முறை நிரனிறையாகக் கொள்ளப்பட்டது. மேலைச்செய்யுளிற் பிரித்த செய்யுட்கள் வஞ்சித் துறை சந்தன மார் கொந்தலர் வீ நந்திய தேன் கந்தநி லாம். 1 | சந்தன மரங்களில் நிறைந்த கொத்தாக மலர்ந்த பூக்களில், நிரம்பிய தேனும் நிரம்பிய வாசனையும் நிலைபெறும். தடஞ்சா ரலெலாம் நெடுங்கா வினெலாம் படுஞ்சூ ழலெலாம் கடந்தாழ் கரிபோம். 2 | அகன்ற மலைச் சாரல்கள் தொறும், நீண்ட சோலைகள் தொறும் மிகும் முனிவரர் இருக்கைகள் தொறும், மத மொழுகும் யானைகள் உலவும். |