303


     பாண்டவ தூதர் என்னப் பயிற்சிபெற்ற பெயரால் அவ்விடத்துச்
சிவபெருமான் திருவடிகளை வழிபாடு செய்திருந்தார். அந்நாள் முதல்
வாமன மூர்த்தியாய் வந்து திரிவிக்கிரம மூர்த்தியாகி உலகையளந்த
திருமாலை நிறைந்த திருநீற்று வேடம் தாங்கி உயர்ந்த சைவர் என்ன
உலகோர் போற்றுவர்.

தான்தோன் றீச்சரப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 970

அமரேசப் படலம்

கலி விருத்தம்

தெத்தேயென வரிவண்டினம் முரலமதுச் சிந்துந்
தொத்தேர்மலர்ப் பொழில்சுற்றுசு வாயம்புவஞ் சொற்றாம்
முத்தார்துறை அதன்கீழ்த்திசை முப்பத்துமுக் கோடிப்
புத்தேளிரும் வழிபாடுசெய் அமரேச்சரம் புகல்வாம்       1

     அழகிய வண்டினங்கள் தெத்தே என ஒலிக்கத் தேனைத் துளிக்கின்ற
மலர்க் கொத்துக்களையுடைய சோலை சூழ்ந்த தான்தோன்றீச்சரத்தைப்
பற்றிக் கூறினாம். முத்துக்களைக் கொழிக்கின்ற சுரகர தீர்த்தத்தின் கிழக்குத்
திசையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் வழிபாடு செய்த அமரேச்சரத்தைப்
பற்றிப் பேசுவாம்.

தேவாசுரயுத்த வரலாறு

வரிவண்டின முரலாமண மாலைக்கட வுளரும்
முரிநுண்ணிடைத் திதிமைந்தரும் முன்னாள் ஒருகாலத்
தெரிமண்டி யெனச்சீறி எதிர்த்துப்பொர லுற்றார்
நரிபேய்கொடி சேனங்கழு குழலுங்கள ஞாங்கர்.     2

     அழகிய வண்டினங்கள் ஒலியாத தெய்வ மணங்கமழ் மாலையை
அணிந்த தேவரும் துவளுகின்ற, நுண்ணிய இடையினையுடைய திதி
மைந்தராகிய அசுரரும் முன்னோர் காலத்தில் செறி நெருப்பெனச் சீறி
மாறுபட்டு நரியும், பேயும், காக்கையும், பருந்தும், கழுகும் சுற்றுகின்ற
களத்தில் போர் தொடங்கினர்.