திருநாட்டுப்படலம் 31


     வன்மை பூண்ட கொடிய அசுரன் மார்பை உழுபடை பிளந்த அளவிலே
பூமி தன் நிறத்தைக் காட்டியது என்னக் கிழித்த உழுசால்வழி எங்கும் ஒளி
மிகுந்த பொன் வெளிப்பட்டு மாட்சிமைப் பட்ட பேரொளி விளங்கித் தங்கிச்
செறிந்த இருளை உண்ணும்.

     நீளுதல்-தங்குதல்;  உலகில் இருள் என்றும் நீங்காமையின் நீள் இருள்
எனப்பட்டது.

வேறு செய்துபின் பொருத்துறும் வினைவல அமைச்சிற்
கூறு செய்ததண் சேறெலாங் குழப்பி ஒன் றாக்கிச்
சாறு செய்துவா சவற்றொழு துறுமிடர் தவிர்த்து
நாறு செய்கென வெண்முளை வித்துவர் நாளால். 74

     தம்மரசர்க்கு நலம் தோன்ற மாறுபட்ட அரசரைப் பிரித்தலும், பின்பு
வேண்டுங்கால் பகை போக்கி அவரைப் பொருத்தலும் வல்ல அமைச்சரைப்
போல, உழுபடையாக வயலை முன் கூறுபட உழுது, பின் குழப்பி ஒன்றாக்கி,
இந்திரனைத் தொழுது விழாச் செய்து மிகும் இடையூற்றினைத் தவிர்த்து
நல்லோரையில், நாற்றாகுக என்று முளைத்த நெல்லை விதைப்பர் உழவர்.

‘வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார்’
நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார். (சீவக-25)

 

அருள்வி ளங்கலும் உடல்பொரு ளாதிய பந்தந்
தரும வன்புடை யெய்துறக் கொடுத்திடுந் தகைபோல்
பெருக யாத்தநீர்க் கலங்கல்போய்த் தெளிந்தபின் முழுதும்
மருவு சால்வழி வடிந்துறக் கவிழ்ப்பார்கள் மள்ளர்.     75

     சிவஞானம் மேலிட்ட அளவிலே தனு, கரண, புவனபோகங்களைத்
தந்த முதல்வனிடத்து அடையக் கொடுத்திடும் முறைபோல, பெருகக் கட்டிக்
குழப்பிய நீர் கலங்கல் நீங்கித் தெளிந்து வண்டல் வயலில் படிந்தபின் நீர்
முழுவதும் வடியும்படி கீழ்மடை வழிச்செல்ல விடுவார்கள் உழவர்கள்.

கலி விருத்தம்

இளமகப் பசிதனக் கேந்து கொங்கைப்பால்
அளவறிந் தூட்டுதாய் மான ஆறறி
களமர்கள் முளைப்புனல் செவ்வி கண்டுநீள்
வளவயல் பாய்த்தித்தம் மகவின் ஓம்புவார்.     76

     தாய் தன் பச்சிளங்குழவியின் பசிக்குக் காலமும் அளவும் அறிந்து
பால் சுரந்து ஊட்டுதல் போலப் பயிர்செய் முறை அறிந்து உழவர்கள்
முளைப்பயிர்க்கு உரிய காலங்களில் அளவொடு நீர் பாய்ச்சி வளவயலைத்
தம் மகவுபோலக் காப்பார்.