| 		| உலகெ லாமுனை வழுத்துக வழிபடா தொழியின் கலிகொள் வேதியர் உம்பரா யினும் அவர் கருமம்
 நிலமி சைப்பயன் எய்துறா தழிகநின் இணைத்தாள்
 மலர்வ ழுத்தினோர் பெரும்பயன் எய்துக மாதோ.   7
 |       ‘உலகோர் யாவரும் உன்னைத் துதி செய்வாராக; வழிபாடு    செய்திலராயின் பெருமைகொள் வேதத்தை உணர்ந்தவராகிய வேதியராயினும்,
 தேவராயினும் அவர் செய்கைகள் நிலவுலகில் பயன் கொடாதொழிக;
 நின்னுடைய துணைத்தாள் மலர்களைத் துதித்தோர் பெரும் பயனை அடைக’.
 		| மங்க லங்களும் அமங்கல மாம்உனை வழுத்தார் தங்க ளுக்கிவை வரம்உனக் கருளினம் தக்கோய்
 இங்கு நீஇன்னும் ஒன்றுகோள் இரணிய புரமாம்
 அங்கண் வாழ்பவர் கேசியே முதற்பலர் அசுரர்.    8
 |       ‘உன்னைப் போற்றி வழிபடாதார்க்கு என்றும் மங்கலச் செயல்களும்     அமங்கலமாய் முடியும். தக்கோனே! உனக்கு இவ்வரங்களை அருள்
 செய்தனம். நீ இப்பொழுது இதற்கு மேலும் ஒன்றனைக் கேட்டி. இரணியபுரம்
 என்னும் அவ்விடத்தில் வாழ்பவராகிய அசுரர் கேசியே முதற் பலராவர்’.
 		| அவனி யாவையும் அலைத்துவெங் கொலைபுரிந் தமர்வார் அவர்கள் ஆருயிர் தாளினாற் செகுத்தவர் கருவுள்
 அவர்கள் சத்தியாம் வல்லபை அணங்குவீற் றிருக்கும்
 அவளை நாள்தொறுங் கெழீஇக்கலந் தன்புகொண்டமர்வாய்.  9
 |       ‘உலகோர் அனைவரையும் வருத்திக் கொடிய கொலையை விரும்பிச்    செய்து வாழ்வார்; அவர் பலரையும் காலாற் சிதைத்து அவர்கள்
 கருவினிடமாக அவர்தம் சத்தியாகிய வல்லபை என்னும் அணங்கு
 வீற்றிருக்கும் அவளை மணந்து நாடொறும் கலந்து அன்பு செய்து
 வீற்றிருப்பாய்.’
 		| வல்ல பைத்திரு வோடுனை வழிபடப் பெற்றோர்க் கொல்லை வேட்டன யாவையும் உறுகென அருளி
 எல்லை யில்பெருங் கருணையால் உச்சிமோந் தெடுத்துப்
 புல்லி எம்பி ரான் விடுத்தனன் மீண்டனன் புதல்வன்.    10
 |       ‘வல்லபை என்னும் அச்செல்வ மகளோடு உன்னை வழிபாடு    செய்வோர்க்கு விரும்பி வரங்கள் யாவும் உறுக’ என ஒல்லையில் அருளி
 அளவில்லாத பெருங்கருணையால் எடுத்துத் தழுவி உச்சிமோந்து எமது
 பெருமானாரும் விடை கொடுத்தனர். புதல்வரும் விடை பெற்றுப்
 பெயர்ந்தனர்.
 |