முப்புரத்தவர் ஒழுக்கம் நிலமீதும் அந்தரத்தும் நெறிதாழ் கூந்தல் அரம்பையர்வாழ் புலமீதும் வெவ்வேறு பொன்னின் வெள்ளி தனில்இரும்பில் வலமேவு மாதவத்தான் மயனார் வகுத்த முப்புரிசை உலமேவு புயத்தவுணர்க் குளவா யினவால் முன்னாளில். 2 | நிலமீதும், அந்தரத்தினும், நெறித்துத் தாழ்கின்ற குழலையுடைய அரம்பையர் வாழ்கின்ற துறக்கத்தினும் வெவ்வேறியல்பினை யுடைய பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும் ஆற்றல் வாய்ந்த பெருந் தவத்தால் அசுரத் தச்சன் இயற்றிய திரிபுரங்கள் திரண்ட கல்லொக்கும் தோளினையுடைய அவுணர்க்கு முற்காலத்தில் உள ஆயின. அங்கவற்றின் உறும்அவுணர் சுருதி மிருதி ஆய்ந்துணர்ந்தோர் துங்கநிலை ஆகமங்கள் முழுதுந் தேர்ந்து துகளில்லோர் கங்கையணி சடைப்பெருமான் வழித்தொண் டாற்றுங் கடப்பாட்டோர் தங்குதிரு வெண்ணீறு சண்ணித் தொளிகால் வடிவினார். | அப்புரிசைகளில் வாழும் அசுரர் வேதங்கள் மனு நூல்களாகிய இவற்றை ஆராய்ந்துணர்ந்தோர்; உயர்ந்த இயல்பினையுடைய ஆகமங்கள் முற்றுந் தெளிந்து குற்றமற்றவர்; கங்கையை அணிந்த சடையினையுடைய பெருமான் வழி நிற்கும் தொண்டு செய்யும் கடமை யுணர்ச்சியோர்; திருவருள் வாய்ந்த வெண்ணீற்றினைப் பூசி ஒளிவீசுகின்ற திருமேனியர், சிவலிங்கத் தருச்சனையே செய்யும் நியதிக் கடன்பூண்டார் சிவதருமந் தலைநின்றார் திகழப் பூணுஞ் சாதனத்தார் சிவனடியார் தமைக்காணின் உவகை துளும்புஞ் சிந்தையினார் சிவநெறியிற் பிறழாத செயலில் தமக்கு நிகரில்லார். 4 | சிவலிங்க பூசனை புரிதலையே வழுவாது கடப்பாடாக மேற்கொண்டவர்; சிவ புண்ணியத்தில் முதிர்ச்சி பெற்றவர்; விளங்கச் சிவ சின்னம் தாங்கியவர்; சிவனடியார் வழிபாட்டில் மகிழ்ச்சி ததும்பும் மனத்தினோர்; சிவ நெறியினின்றும் மாறுபடாத செய்கையில் தமக்கு நிகர் தாமே ஆவர். எவ்விடத்துஞ் சிவகதையே இயம்பு வோரும் கேட்போரும் எவ்விடத்துஞ் சிவபணியே இயற்று வோரும் மெச்சுநரும் எவ்விடத்துஞ் சிவனடியார் எதிர்கொள் விருந்து புறந்தருதல் எவ்விடத்துஞ் சிவநாம முழக்க மன்றி இலை அங்கண். 5 | முப்புரத்தில் யாங்கணும் சிவபுராணங்களைப் படிப்போரும் கேட்போரும் ஆயினர்; எவ்விடத்தும் சிவபிரானுக்குத் திருத்தொண்டு புரிவோரும் புகழ்வோரும் ஆயினர்; எவ்விடத்தும் சிவபிரா னடியவரைச் சென்றெதிர் கொள்வோரும், விருந்தூட்டுவோரும் ஆயினர்; எவ்விடத்தும் சிவபிரான் திருப்பெயரின் முழக்கமன்றி பொருளற்ற ஓசை அவ்விடத்தில்லை. |