கயிலாயப் படலம் 321


     அணுகிப் பெருமான் திருவடிகளைப் பணிந்தெழுந்து துதித்து தாமரை
மலர்போலும் கரங்களைக் குவித்து விழிப்பொடும் உரைப்பான். சங்கினால்
இயற்றப் பெற்ற குழைக்காதணியினனே! முப்புரத்தில் உறை அசுரர்
எங்களுக்குத் துன்பம் செய்ய அதனால் இப்பொழுதளவும் வருந்தினம்.

மாயையின் நெறிகாட்டும் புத்தனின் மருளுற்றுத்
தூயநன் னெறிவிட்டார் துகள்படும் அவர்தம்மை
மாய்வுசெய் தெமைஆள்வாய் யாமளை வனிதைமுத
லாயினர் தமைமுன்னாள் மருள்புரி அடிகேளோ.    18

     ‘மயக்குறும் வழியை ஒளிநெறியென உணர்த்தும் புத்தனால் மருண்டு
தூய்மையும் நன்மையும் அமைந்த வழியைக் கைவிட்டார். குற்றப்படும்
அவரை அழித்து எம்மை ஆட்கொள்வாய், முனிவரர் துணைவியராகிய
யாமளை முதலானோரை மயக்குறுத்தும் அடிகளே?

பெருமான் முப்புரம் எரித்தல்

வஞ்சி விருத்தம்

என்று மாயன் இயம்புசொல்
சென்று வார்செவி சேர்தலும்
மன்று ளாடிய வான்பொருள்
ஒன்று கூறத லுற்றிடும்.                        19

     என்று திருமால் வேண்டிய சொற்கள் நீண்ட திருச்செவியில் சென்று
சேர்ந்த அளவிலே அம்பலத்தாடுகின்ற பரம்பொருள் ஒன்று கூறத்
தொடங்கும்’.

கருவி மூதெயில் காதுபோர்க்
கருவி ஒன்றிலம் காண்வரக்
கருவி கூடிற் கணத்தவர்
கருவெ லாமிறல் காண்டியால்.                  20

     ‘போர்க்கருவிகள் அமைந்த பெரிய கோட்டைகளை அழிக்கின்ற
போருக்குரிய துணைக்காரணங்கள் ஒன்றனையும் காணும்படி உடையே
மல்லேம்; அவை கிடைப்பின் ஓர் கணப்பொழுதில் மூலத்தொடும்
அழிதலைக் காண்பாயாக.’

என்னும் வாய்மொழி எம்பிரான்
முன்னர் நந்தி முகத்தினாற்
சொன்ன காலைத் துழாயனும்
அன்ன தேவரோ டாய்ந்தனன்.                 21