|      ‘பாவச் செயல்கள் எவற்றினுக்கும் அவ்வவற்றில் தப்பினோர்க் குரிய    பிராயச்சித்தம் (கழுவாய்) நூல்கள் பேசும்; மேன்மை பொருந்திய அடியவர்
 தம்மை மயக்கிய தீவினையை யுடையவர்க்கு வருந்தத் தக்க நரக
 தண்டனையன்றி வேறோர் சிறு தண்டனைகளை நூல்கள் பேசமாட்டா.
 சொல்லுமிடத்து அத்தகு தீராப் பாவமும் காஞ்சியைப் புகலடைந்தவர்க்கு
 நீங்கும்.’
 		| கச்சியில் உறுத லானும் கடுவினை மெலிதாய் விட்ட திச்சையின் இலிங்கம் இங்கண் இருத்துபு வழிபா டாற்றும்
 அச்செயல் வலியாற் சாலக் கழிந்ததே யானுங் கேண்மின்
 முச்சகம் புகழும் நல்யாழ் முனிவனே புத்த ரேறே.       37
 |       ‘மூவுலகும் புகழும் நல்ல யாழுடைய முனிவனே! புத்தர்க்குத்     தலைவனே!  கேளுங்கள் காஞ்சியை அடைந்த காரணத்தாலே தீவினையின்
 வலிமை மெல்கிற்று. விருப்பினால் சிவலிங்கம் இங்குத் தாபித்து வழிபாடு
 செய்யும் அத்திண்ணிய பயனால் பெரிதும் கழிந்தது; ஆயினும்.’
 		| பிறர்க்குப கார மாதற் பெற்றியான் ஒருகாற் பாவத் திறத்தினைப் புரிவ ரேனுஞ் சிவநெறிச் சிதைவு தன்னை
 மறப்பினும் எண்ணல் ஓம்பல் எண்ணினோர் வழங்கல் செல்லா
 நெறிப்படு நரகின் வீழ்ந்து நீந்தரும் இடும்பை கூர்வார்.    38
 |       ‘பிறர்க்கு உதவியாக அமைய ஓர் கால் பாவச்செயலை    மேற்கொள்வரெனினும் சிவபுண்ணியச் செயலை மாற்றுதலை மறந்தும்
 எண்ணாமல் குறிக்கொண்டு காக்க. சிவபுண்ணியத்தைச் சிதைக்க
 எண்ணினோரும் பிற குற்றங்கள் செய்தோர் புகாத நரகக் குழியில் வீழ்ந்து
 கடத்தற்கரிய துன்பக் கடலில் அழுந்துவர்,’
 		| இன்றுநீர் வழுத்தும் அன்புக் கிரங்கினேம் நுமது பாவம் துன்றுபல் பிறவி தோறுஞ் சுழன்றலாற் கழியா தாகும்
 நன்றது கழியு மாறு நவிலுதும் இனைய வைப்பின்
 மன்றமற் றெமைப்பூ சித்து வலம்புரிந் துறைதிர் என்றும்.  39
 |       ‘இப்பொழுது நீவிர் துதி செய்தற்குக் காரணமான அன்பினுக்கு     இரங்கி எளி வந்தனம். நும்முடைய தீவினைகள் செறிகின்ற பல் பிறப்புக்களில்
 உழன்று நுகர்ந்து அல்லாமற் கழியா ஆகும். விரைவிற் கழியுமாறு கூறுவேம்.
 இத்தலத்தில் எம்மை உறுதிபெற என்றும் பூசனைபுரிந்து வலம் வந்து
 இருப்பீராக.’
 		| வலஞ்செயப் புகும்அப் போதும் வெளிக்கொளும் போதும் வாயிற் புலந்தனைச் சுருங்கை யாகப் புரிதும்அங் கவையே கன்மப்
 பலங்களை நுகருந் தோற்றம் இறப்பெனும் பகுதி யாகி
 இலங்கஈண் டினிது வாழ்மின் இறுதியில் தருதும் முத்தி.     40
 |  |