வன்மீகநாதப் படலம் 343


நக்கான் முகத்தால் அவன்தேசுமுற்றும் நறுஞ்சாமையாய்
அக்காலை நீங்குற்ற வாற்றால் அடல்விற் கழுத்தூன்றுபு
மைக்காளம் அன்னான் நெடும்போது வாளாது நின்றான்குண
திக்காளி அன்னான்றன் நிலைகண்டுபுகழ் வௌவுதிறம்
                                    எண்ணினான்.  5

     இகழ்ந்து சிரித்த திருமாலின் ஒளி முழுதும் முகத்தின் வழியாக நறிய
சாமை வடிவின் அப்பொழுது நீங்கியமையால் வலி அமைந்த வில்லைத்
தரையிடை யிட்டு ஓர் நுனியைக் கழுத்திற் பொருந்த ஊன்றியிட்டு கரிய
மேகம் போலும் நிறமுடையோன் நெடும்பொழுது வறிது நின்றனன்.
கீழ்த்திசைக்குத் தலைவனாகிய இந்திரன் அத்திருமாலின் தளர்ச்சியைக்
கண்டு புகழைக் கவரும் வழியைச் சிந்தித்தனன்.

     பொருளிழப்பினால் தலையைச் சாய்த்தல் நிகழும்.

கச்சிப் பதிக்கண் விரைந்தெய்தி அங்கண் கடுக்கைப்பிரான்
இச்சித்த கயிலாய நிருதித் திசைக்கண் இலிங்கம்நிறீஇ
நச்சித் தொழுங்காலை எங்கோன் அணைந்தென்னை
                                 நவில்கென்றலும்
பச்சைத் துழாய் அண்ணல் கவர்கீர்த்தி விண்ணோர்
                                 பெறப்பாலியாய்.   6

     கச்சிமாநகரை விரைந்தடைந்து அவண் கொன்றைமலரணிந்த பிரான்
விரும்பிய கயிலாயத்திற்குத் தென் மேற்கில் சிவலிங்கத்தைத் தாபித்து
விரும்பித் தொழுகையில் எம்பெருமான் அணுகி ‘விரும்பியது யாது சொல்லுக’
என்ற அளவிலே ‘பசிய துளவ மாலையை அணிந்த திருமால் கவர்ந்து
கொண்ட புகழை யாங்கள் யாவரும் அடையுமாறு அருள் செய்வீராக.’

     என்னா நவின்றேத்து சசிகேள்வ னுக்கெம்பிரான் ஓதுவான்,
வன்மீக நாப்பண் சிறுச்செல் லுருக்கொண்டு வார்வில்லுடை, அந்நா
ணறத்தின்று பின்கீர்த்தி கொள்கென்ன அருள்செய்தலும், பொன்நாடர்
கோமானும் விடைகொண்டு மீண்டான் பொருக்கென்றரோ.         7

     என்று கூறித் துதிக்கும் இந்திராணி நாயகனுக்கு எமது பெருமானார்
அருள்வர். ‘புற்றின் நடுவில் சிறிய செல்வடிவு கொண்டு நீண்டவில்லிற்
பூட்டிய நாணியை அறும்படி அரித்துப் பின்னர்க் கீர்த்தியைக் கொள்க’
என்றருள் செய்த அளவில் அமராவதியினர் தலைவனாகிய இந்திரனும்
விடை கொண்டு விரைந்து மீண்டனன்.

     சிறுசெல் எனற்பாலது வலித்தல் விகாரம் பெற்றது; ‘‘சிறுக்கட்பன்றி’’
(ஐங்கு. கேழற்பத்து 6) என்புழிப்போல.

அவ்வாறு புற்றிற் கிளைத்தெய்தி அந்நா ணறத்தின்றுழிப்
பைவாய்ப் பணிப்பாயலான் சென்னி அறுபட்டு வீழ்ந்தவ்விடம்
இவ்வாய்மை யாற்சின்ன மாகேச வத்தானம் என்றாயதால்
செவ்வே குறைச்சென்னி யாறங்கண் ஓடுந் திருத்தக்கதே.     8