344காஞ்சிப் புராணம்


     அங்ஙனமே புற்றிற்றோன்றி நாணியை அரித்திடும்பொழுது படமுடைய
ஆதிசேடனைப் பாயலாகவுடையவன் சிரம் அறுபட்டு வீழ அந்த இடம்
இந்நிகழ்ச்சியால் சின்னமாகேசவத்தானம் எனப்பெற்றது. செவ்விதாகக்
குறைபடுதலையுடைய சிரோநதி யென்னும் ஆறு அவ்விடத்தோடும்
சிறப்பினது.

திருமால் தலைபெற்ற வரலாறு

மேற்படி வேறு

ஆய காலையில் அவன்புடை நின்றும்அப் புகழைப்
பாய விண்ணவர் கவர்ந்துகொண் டோகையிற் படர்ந்தார்
மாயி ரும்புவி மிசைவளர் இருபிறப் பாளர்க்
கேயும் எச்சனாம் மாயவன் இன்மையின் உயங்கி.        9

     அப்பொழுது திருமாலிடத்திருந்தும் அப் புகழை முப்பத்து முக்கோடி
தேவர் எனப் பரவிய தேவர் கைப்பற்றிக்கொண் டுவகையிற் சென்றனர்.
மிகப் பெரிய பூமியில் தங்குகின்ற இருபிறப்பாளராகிய அந்தணர்க்குப்
பொருந்தும் யாக வடிவினனாகிய திருமால் இல்லாமையால் வாட்டமுற்று. 

மீட்டும் எய்தினன் காஞ்சியை விதியுளி வழிபட்
டீட்டும் அன்பினுக் கெம்பிரான் எதிரெழுந் தருளப்
பாட்டி சைப்பழ மறைகளாற் பரசினன் நவில்வான்
தோட்ட லர்க்குழற் சசிமுலை திளைத்ததோள் குரிசில்    10

     இந்திரன் மீளவும் காஞ்சியை அடைந்தனன். உரிய முறையில் வழிபாடு
செய்து பெருக்கிய அன்பின் காரணமாக எமது பெருமான் காட்சி தந்தருளத்
தரிசித்து இசையமைந்த பழைய வேதப்பாடல்களாற் றுதி செய்தனனாய் இதழ்
கொண்ட மலர்களை முடித்த கூந்தலையுடைய இந்திராணியின் புணர்முலைப்
போகங் கொள்ளும் தோள்களையுடைய குரிசிலாகிய இந்திரன் கூறுவான்.

கலி விருத்தம்

அறுபதம் முரன்றிசை முழக்கும் ஆய்இதழ்
நறுமலர்க் கடுக்கைசூழ் சடில நாயக
எறுழ்வலிச் சிலையினால் எச்ச னாகிய
சிறுமலர்த் துளவினான் சென்னி அற்றதால்.      11

     ‘வண்டுகள் ஒலித்திசையை எழுப்பும் அழகிய இதழ்களையுடைய நறிய
கொன்றை மலர் மாலை சூழும் சடைமுடிப் பெருமானே! பெருவன்மையுடைய
வில்லால் யாகவடிவினனாகிய சிறிய மலர்த்துழாய் மாலையோன் தலை
அறுபட்டது.