நீர் கொண்ட மேகத்தை ஒத்த பசிய பயிர்களினிடங்களிலெல்லாம் மின்னல் போலத் தமது வடிவந்தோன்ற விளங்கி அவ்விடத்துலாவும் மருத நிலப்பெண்கள், அழகிய தாமரையை யொத்த தமது கால்களைச் சேற்றினின்றும் மெல்ல வாங்கித் தேன் சிந்துங் கூந்தலில் கரிய வண்டு களொலித்து மேலேயெழக் கரையிலேறா நிற்பார்கள். தெறுங்களை கட்டநீர்ச் செறுவிற் பண்டுபோல் நறுங்கள்அம் போருகச் சேக்கை நாடிவந் துறுங்களி ஓதிமம் உயங்கி வாடுவ வறுங்கள நாடியுள் மறுகு மாந்தர்போல். 91 | பயிர்களை வருத்தும் களைகளைக் களைந்தெறிந்த நீரையுடைய வயலில், களிப்பு மிக்க அன்னங்கள் முன்பு போலத் தாமிருக்கும் நறுமணங்கமழும் தேனையுடைய தாமரைகளாகிய படுக்கைகளை நாடி வந்து அவையில்லாமையால், தலைவி அல்ல குறிப்பட்டமையால் அவள் நிற்றலொழிந்த இடத்தைநாடி மனஞ் சுழலும் தலைவரைப் போல மனம் வருந்தி வாடா நின்றன. கொள்ளைபோய் நனிவறங் கூர்ந்த காலையும் வள்ளியோர் விருந்தினர் வாடக் காண்பரோ கள்ளறா மலர்வள மிழந்துங் கார்வயல் வெள்ளன மகிழமீன் விருந்து நல்குமால். 92 | வள்ளல்கள் தம்பொருள் முழுதும் வறியர் கவர்தலால் மிகவும் வறுமையுற்ற காலத்தும் தம்மிடத்து வந்த விருந்தினர் பசியால் மெலியக் காண்பரோ? காணார். அவ்வாறே, பயிராற் கருமைவாய்ந்த வயல்கள் தேன் சிந்தும் மலர் வளத்தை இழந்தும், வெள்ளிய அன்னம் மகிழ்ச்சி மிக மீன்களை விருந்தாகத் தாராநிற்கும். மண்ணக மகளிர்கை வண்மை கண்டயாம் விண்ணக மகளிர்கை மேன்மை காண்டுமென் றெண்ணிமேற் சேறலுற் றென்ன வான்பயிர் கண்ணிறை கவின்செழித் தோங்குங் காட்சித்தே. 93 | நன் செய்ப்பயிர்கள், நிலவுலகிலுள்ள பெண்டிர் கைராசியைப் பார்த்த யாம் விண்ணிடத்துள்ள தேவமாதரது கைவளத்தையும் காண்போமென்று கருதி மேலெழுந்து சென்றாற்போலக், கண்களுக்கு நிறைந்த அழகால் விளங்கி வளரும் காட்சியையுடையது. கொச்சகக் கலிப்பா ஈன்றெடுத்தோர் குணமகவுக் கியையுமுறைப் படிவித்தின் தோன்றுமுளை முன்விளர்த்துப் பின்பசந்த தொடர்பினால் ஆன்றசெழுங் கதிர்களுமுன் தூவெள்ளை யாயெழுந்து மான்றுமர கதமேனி வாய்த்துமடல் கிழித்தெழுமால். 94 | |