கண்ட னன்பணிப் பாயலான் கவலைகள் முழுதும் விண்ட னன்தழீஇக் கொண்டனன் மீமிசை வியப்புக் கொண்ட னன்தன தமைச்சியல் பூண்டஅக் குரிசிற் கண்டர் போற்றுசே னாபதித் தலைமைஅன் றளித்தான். 24 | ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டமாயன் கண்டனன்; வருத்த முழுதும் விடுத்தனன்; இறுகப் புல்லிக் கொண்டனன்; அதிசயம் மேன் மேற்கொண்டனன்; அமைச்சர் பாரத்தைப் பூண்டுள்ள விடுவச்சேனர்க்குத் தேவர் போற்றும் சேனாதிபதித் தலைமையையும் அன்றே அளித்தனன். விடுவச்சேனன் விண்டுவினிடத்தில் வரம்பெறல் உருத்தி ரச்செயல் வீரபத் திரன்புடை உற்றுத் திருத்த கும்படை பெற்றவா செப்புகென் றிசைக்குங் கருத்த னுக்கவண் நிகழ்ந்தன யாவையுங் கரைந்தான் அருத்தி கூர்படைக் கிறையவன் அச்சுதன் கேளா. 25 | ‘அழித்தலையுடைய வீரபத்திரர்பாற் சென்று தெய்வத்தன்மையுடைய சக்கரத்தைப் பெற்ற தெங்ஙனம்’ கூறுக என்னுந் தலைவராகிய விட்டுணுவிற்கு அங்கு நிகழ்ந்த செய்திகள் முழுவதும் கூறினான் படைத்தலைவனாகிய விடுவச்சேனன், விருப்பம் மிகக்கேட்டு, முறுவல் பூத்தனன் மொழியும்அவ் விகடநாடகத்தை உறுவர் ஏறனாய் எம்மெதிர் காட்டுகென் றுரைப்பத் தெறுபெ ரும்படைக் கிறைவனுந் திருந்தவைக் களத்து நறும லர்த்துழா யவனெதிர் நடித்தனன் அதனை. 26 | திருமுக மலர்ந்து ‘பேசப்பெறும் அவ்விகட க் கூத்தைத் தேவர் தம்மில் மிக்கோனே! எம்மெதிர் நடாத்துக’ என்று கூற, அழிக்கின்ற பெரும்படைச் சேனாதிபதியும் சீரிய சபையின்கண் திருமால் திருமுன்பு அக்கூத்தினை இயற்றினன். நோக்கி அற்புதம் எய்தினன் மாயவன் நுவல்வான் ஊக்கும் ஆற்றலோய் உள்ளமும் விழிகளும் உவகை மீக்கொ ளப்புரி வியத்தகும் இப்பெரு விகடம் பார்க்கில் யாவரே கழிபெரு மகிழ்ச்சியிற் படாதார். 27 | மாயவனார் கண்டு வியந்து கூறுவார்; எழுச்சி மிகும் ஆற்றலை யுடையோனே! மனமும், கண்களும் களிப்பு மிக அதிசயிக்கத்தகும் இவ் விகடக்கூத்தைக் காணில் தம் வயமிழந்து மிகப்பெரு மகிழ்ச்சியில் மூழ்காதார் யாவரே! எமக்கு நன்மகிழ் வளிக்கும்இக் கூத்தினை இதன்மேல் நமக்கு முன்னுற நலங்கெழீஇ நடிக்கும்நம் அடியார் தமக்கு வேட்டன வழங்குவேம் தழல்மணிக் கதிர்கள் இமைக்குங் காஞ்சியின் வரதரா சப்பெயர் எம்முன். 28 | |