368காஞ்சிப் புராணம்


     ‘ஐயனே! படைத்தற் றொழிலை வரத்தா பெறுமின்’ என்றெம்
தந்தையார் ஆணையிட்டனர். ‘அவ்வல்லமையை அடையும் வழியை
எமக்கருள் செய்வாயாக!’ என விடை அளித்திரப்ப ஒழுக்கத்தினின்றும்
மாறுபடாத உண்மையுடைய நாரத முனிவர் கேட்டு அத்தக்கன் மக்கள்
உய்ய உபதேசம் செய்வார்.

ஐந்தொழில் நடாத்து முக்கண் ஐயனே உலகம் எல்லாம்
மைந்துறப் படைக்கின் றானால் மற்றுநீர் உழந்தீ ராயின்
பந்தமே பயக்கும் பந்தப் படைப்பினாற் பயப்ப தென்னே
வெந்தளைப் பட்டோர் வேறு நிகளமும் விழைவ ரேயோ.   5

     ஐந்து தொழில்களையும் ஒருங்கு நடாத்துகின்ற முக்கண்களையுடைய
முதல்வரே உலகங்கள் அனைத்தையும் செவ்வியவாகச் சிருட்டிக்கின்றனர்.
ஆதலின் நீவிர் தொழிலால் வருந்துவீராகலின் தீவினையாகிய விலங்கே
வந்து சூழும். படைத்தலாகிய பாசச் செயலால் விளைவது மீளப்பிறத்தலே
ஆம். வேறென்னே பயனாம். விலங்கிடை அகப்பட்டோர் மேலும் வேறு
விலங்கில் சிக்கிக்கொள்ள விரும்புவரோ?

     இறைவனார் தன்வயமுடையராய்ச் சங்கற்பத்தால் ஐந்தொழிலும்
இயற்றுவர். கரணத்தால் செய்யு முயிர்கள் விகாரமெய்திப் பந்துமுறுவர்.

பிணிப்புறு நிகளம் நீக்கும் பெற்றியே எவரும் பெட்பர்
கணிப்பருந் தவத்தான் மிக்கீர் தெளிமினோ கருணை வெள்ள
மணிக்களத் திறைவன் பாதம் வழிபடல் ஒன்றே யன்றிப்
பணித்திடும் எவையும் தீய பந்தமே பயக்குங் கண்டீர்.       6

     கட்டுற்ற விலங்கினின்று நீங்கும் நிலையையே யாவரும் விரும்புவர்.
மதித்தற்கரிய தவத்தினால் மிக்கீராகிய தக்கன் மக்களே! இதனைத் தெளிமின்,
கருணைப் பெருங்கடலாகிய காளகண்டப் பெருமான் திருவடிகளை
வழிபடுதலாகிய ஓர் பணியே அல்லாமல் விதிக்கப் பெறும் பிற யாவும்
கொடிய பிறவி வலையிலே அகப்படுத்தும்’ என்றறிதிர்.

ஆருயிர்க் குறுதிப் பேறாம் அரும்பயன் எவற்றி னுள்ளுஞ்
சீரிய முத்தி ஒன்றே சிறந்ததாம் ஏனைப் பேறு
பேரிடர்ப் பால வாகும் ஆதலாற் பேசக் கேண்மின்
நாரிஓர் பாகன் மேய கச்சிமா நகரம் நண்ணி.          7

     அரிய உயிர்களாகிய மக்கட் பிறப்பினோர்க்கு எத்துணைச் சிறந்த
ஊதியங்களினும் மிக்கது தலையாய முத்தியாகிய அடிசேர் முத்தியே ஆகும்.
பிற பேறுகள் பெருந்துன்பத்தின்பாற் படுத்துவன. ஆதலினால், பேசுவ
கேட்டுக் கடைப்பிடிமின். மங்கை பங்கன் விரும்பி வீற்றிருக்கின்ற காஞ்சியை
அடைந்து,