| உலகீன்ற அன்னையின் கூற்றில் வந்தகாளி, விளங்குகின்ற சரசுவதியின் கொங்கையையும், மூக்கையும் அரிந்து தேவமாதர் ஏனையோர்க்கும் அத்தண்டத்தைப் புரிய விளங்கும் தேவர்க்கும் முனிவரர்க்கும், எண்டிசைத் தலைவராகிய இந்திரன் முதலானோர்க்கும் வீரபத்திரர் அன்று தக்க தண்டங்களைப் புரிந்தனர். தடங்கொள் சாலை முற்றும் வெந்த ழற்க ளித்தி யூபமும் பிடுங்கி வேள்வி யாற்றி னோர்பெ ருங்க ழுத்தை நாணினால் மடங்க யாத்து வேள்வி யங்கம் மற்றவும் எடுத் தெடுத் திடங்கொள் கங்கை யூட ழுத்தி யிட்ட வன்க ணங்களே. 39 | இடங்கொண்ட சாலை முற்றவும் நெருப்பிற்கு இரையூட்டி வேள்வித் தூணையும் பறித்து யாக புரோகிதர்களின் கழுத்தைத் தருப்பைக் கயிற்றினால் சிக்கப் பிணித்து வேள்விக்குரிய உபகரணங்கள் எவற்றையும் பரவிய கங்கையில் எறிந்தனர் கணநாதர். இன்ன வண்ணம் வேள்வி முற்றும் இற்ற வாறு காண்டலும் பொன்னு டைத்து ழாயி னான்பொ றாதுளம் புழுங்கினான் முன்னர் வெள்கி மானம் உந்த மொய்ப றப்பை யேறெனப் பன்னும் ஊர்தி மேல்இ வர்ந்து படைஎ டுத்தெ திர்ந்தனன். 40 | இவ்வாறு வேள்வியை அழித்த வகையைக் கண்டு பீதாம்பரத்தையும் துழாய் மாலையையும் அணிந்த திருமால் உள்ளம் உடைந்து புழுக்கம் எய்திப் பின்பு நாணமுற்று மானம் செலுத்த வலியுடைய புள்ளரசு எனப் பேசப்பெறும் வாகனமேற்கொண் டூர்ந்து பொருது எதிரேற்றனன். ஆய காலை அண்ணல் ஆணை யாற்றின் நான்மு கப்பிரான் மேய வையம் முன்னர் உய்ப்ப ஏறி வீர வள்ளலும் மாய னோடெ திர்த்து வெம்ப டைக்க லம்வ ழங்கினான் ஏய அங்கண் மூண்ட பூசல் யாவர் சொல்ல வல்லரே. 41 | அப்பொழுது வீரபத்திரர் ஏவலால் நான்முகன் பொருந்திய தேரினை முன் செலுத்த வீரபத்திரரும் ஏறி யிருந்து திருமாலோ டெதிர் நின்று கொடிய படைகளைத் தூண்டினார். அவ்விடத்து முதிர்ந்த போரினை யாவர் சொல்ல வல்லராவர். வெற்றி தோல்வி இன்றி நின்று வெஞ்செ ருப்பு ரிவுழிச் செற்றம் மிக்கு மாயன் வெய்ய திகிரி யைச்செ லுத்தினான் மற்றும் வீர பத்தி ரன்றன் மார்பின் முண்ட மாலையுள் ஒற்றை வெண்க பாலம் அப்ப டைக்க லத்தை உண்டதால். 42 | வெற்றி தோல்வி காணாத வகையில் நிலைத்துக் கொடிய போரைப் புரிகையில், திருமால் கோப மிகுந்து கொடிய சக்கராயுதத்தை ஏவினார். வீரபத்திரர் மார்பில் விளங்குகின்ற சிரமாலையுள் பிரம கபாலம் ஒன்றதனை விழுகியது. |