திருநாட்டுப்படலம் 39


வெற்பெ லாமண்ணின் வீழ்த்து வலாரிதன்
ஒப்பி லூர்தியை ஏவிஒ றுத்தல்போற்
பற்பல் போர்கள் சரித்துப் பகட்டினம்
முற்பி ணைத்து நடத்துவர் மொய்ம்பினோர்.    105

     மலைகளை எல்லாம் மண்ணில் விழச்செய்து இந்திரன் தனது
ஊர்தியாகிய மேகங்களைச் செலுத்தி அவற்றை மிதித்துத் தண்டித்தல்போல
வலிமையையுடைய மருதநிலத்து மக்கள் இட்ட பல நெற்போர்களைச் சரித்து
எருமைக்கடாக்களை ஒன்றொடொன்று பிணைத்து மிதிப்பிப்பாராயினர்.

நெற்ப லாலத்தின் நீங்கிய தோவெனப்
பற்பல் கால்முகங் கோட்டின பார்ப்பபோற்
பொற்ப வாயினில் பூங்கதிர் கவ்வுபு
சொற்ப கட்டினஞ் சுற்றி உழக்குமால்.         106

     நெல், வை(வைக்கோல்) யினின்றும் நீங்கியவோ என்று பன்முறையும்
முகத்தை வளைத்துப் பார்ப்ப போலப் பொலிவு பெற வாயா லழகிய
நெற்கதிர்களைக் கவ்விக்கொண்டு நெற்போர்களை எருமைக் கடாக்களின்
கூட்டம் சுற்றிக் கலக்கா நிற்கும்.

     சொல்-நெல். பலாலம்-வை.

உடலின் ஆவி பிரிந்தென ஊழ்வினைத்
தொடர்பு நீங்குவ தொப்பத் தொகுத்தநெற்
படலை வையினில் நீங்கப் பகட்டினம்
அடைய வுந்தொடர் நீங்கி அகலுமால்.        107

     உடலினின்றும் ஆவி பிரிந்தமையால் பிராரத்த கன்ம சம்பந்தமும்
அந்த அளவில் நீங்குதல் போலத், தொகுத்த நெற்போர்த் தொகுதியில்,
நெற்குவியல் வைக்கோலின் நீங்கக் கடாவினம் முழுதும் பிணிப்பினின்றும்
நீங்கி அகலும்.

வைய கற்றி வளிஎதிர் தூற்றலும்
பொய்ய கன்றவர் ஐம்பொறி போதல்போற்
கைய கன்று கழிவைப் பொடியொடும்
ஒய்யெ னப்பதர் அப்புறத் தோடுமால்.       108

     வைக்கோலினின்றும் நெல்லை யகற்றிக் காற்றெதிர் தூற்றலும்,
சிவஞானிகளுடைய ஐம்பொறிகளின் தொழில் ஒழிதல் போல, நீங்கிக் கழிந்த
வைக்கோற் பொடியோடும் நெற்பதர்கள் விரைந்து அப்புறத்தோடா நிற்கும்.

     பொய் அகன்றவர்-உள்ளனபோலத் தோன்றி உண்மையில் நிலையாமை
உடைய உலகப் பொருள்களின் மேற் பற்று நீங்கிய சிவஞானிகள்