414காஞ்சிப் புராணம்


     எல்லா உயிர்களையும் துன்பம் இல்லையாக முக்கூற்றுட் படுத்துக்
கூத்தாட்டுக் காண்போர். தம்மையே தொழுவானைத் தாமே அழிப்பது
அறம் அன்றென்று திருவுள்ளத்துட் சினக்குறிப்புடன் அருளினர்.

இருள்குடி யிருந்தபுன் மனத்தின் ஈங்கிவன்
முரணினை யடக்கவே போலும் முந்தைநாள்
செருவகத் தெம்மினுந் திறல்கொள் வாயென
வரம்அரிக் கெம்பிரான் வழங்குஞ் சூழ்ச்சியே.      17

     முற்காலத்தில் எமது பெருமான் போர்க்களத்தில் எம்மிடத்தும் வெற்றி
பெறுகெனத் திருமாலுக்கு வரம் நல்கிய உபாயம், அறியாமை குடிகொண்ட
புல்லிய மனத்தினன் வலிமையை அடக்கவே ஆதல் கூடும்

     இந்நிகழ்ச்சியைப் பாரதம் சாந்தி பருவத்துட் காண்க.

நம்பன்ஈ துரைத்தலும் நக்குக் கையெறிந்
தெம்பிரான் முப்பதாம் முறையின் என்னொடேற்
றும்பரார் கணத்தொடும் ஓடி உய்ந்துளான்
அம்பக முளரியான் அமருக் காற்றலான்.         18

     நமக்குச் சிறந்தோர் இதனைக் கூறலும் கைகொட்டி நகைத்து,
எம்பிரானே! தேவரொடும் கூடிவந்தென்னொடும் போரெதிர்ந்து முப்பது
முறை தோற்றுப் புறங்காட்டி உயிர் பிழைத்த பதுமாட்சன் போர் செயற்கு
வலியிலன்,

அவனைஓர் ஆண்டகை மீளி யாகவைத்
தெவன்இது கிளந்தனை எந்தை நீயெனக்
கவர்மனக் கொடுந்தொழில் தறுகண் காய்சினத்
தவலுடை ஊழினான் இகழ்ந்து சாற்றலும்.        19

     ‘அவனை ஓர் ஆண் தன்மையுடைய வீரனாக வைத்து என்னே
இதனைக் கூறினை எந்தையே! நீ’ என்று கொடிய செயலையும்
அஞ்சாமையையும், தெறுகின்ற சினத்தையும் விரும்புகின்ற மனத்தினையும்
கெடுதலையுடைய விதியையும் உடையோன் இகழ்ந்து பேசலும், தவல்-
இன்னாதாதல்; ‘‘தவலும் கெடலும் நணித்து’’ (திருக். 856.) என்புழிக் காண்க.
‘‘கவர்வு விருப்பாகும்’’ (தொல். தொல். உரி. 66.)

அவன் அமர்க் கிடைந்தவன் றனைக்கொண் டேஅவன்
கவர்மதம் அடக்கிய நினைந்த கண்ணுதற்
சிவபிரான் குறுநகை முகிழ்த்துச் செப்புவான்
தவலரும் ஆற்றலோய் சாற்றக் கேள்மதி.          20

     தோற்ற திருமாலைக்கொண்டே வாணனைக் கைப்படுத்த அகந்தையை
அடக்க நினைந்த பிரானார் இளநகை காட்டிக் கூறுவார்; ‘கெடாத
வலியினனே! சாற்ற அதனை மதித்துக் கேட்டி.’