கொங்கையைத் தைவந்து, உயிர்த்து முத்தம் சுவைத்து அதர பானத்தைத் தேக்கவுண்டு விளரிப்பண் வண்டிற்கு விருந்தூட்டும் போக மாலையன் மேகலையைத் தளர்த்திக்கொய்சகக் கட்டினை அவிழ்த்துப் புதுப்போகங்கொள அல்குலாகிய தடத்துள் படிந்து விளைகின்ற பெரிய கலவிப் போகக் கரை காணாத வெள்ளத்துள் அழுந்தினான். துணைவிழி சேப்பச் செவ்வாய் துடிப்பவேர் வரும்பப் பூக மணிமிட றொலிப்ப ஆர்ப்ப வால்வளை தடந்தோள் வெற்பிற் பணைமுலைக் களிநல் யானை பாய்ந்துபாய்ந் துழக்க மெல்கும் அணைமிசைக் கலவிப் பூசல் மடந்தையும் ஆடி னாளே. 30 | உஷையும் இருவிழிகள் முழுதும் சிவப்பவும், பவளவாய் துடிப்பவும், வியர்வை அரும்பவும், கமுகை யொத்த அழகிய கண்டம் ஒலிப்பவும், வெள்ளிய வளைகள் ஆரவாரிக்கவும், அவனுடைய பருத்த தோளாகிய மலையில் பருத்த கொங்கையாகிய களிப்புடைய நல்யானை தாக்கித் தாக்கிக் கலக்கக் குழையும் பள்ளியில் கலவிப் போராடினாளே. புணர்ச்சியின் மருங்கு நிற்றல் புரையென விலகும் மேலோர் குணத்தையுற் றுடையும் நாணும் புறஞ்செலத் தூர்த்தர் மான வணர்க்குழல் கட்டு விட்டு மருங்கெலாங் கொட்ப நோக்கி இணைச்சிலம் பார்ப்பத் தண்டா தின்னலம் நுகர்ந்து வாழ்நாள். 31 | கூட்டத்துள் உடனிருத்தல் குற்றமென அகலும் மேன்மக்கள் குணங் கொண்டு துகிலும் நாணமும் புறத்தே போகவும், காமுகரைப் போலச் சுருண்ட கூந்தல் கட்டவிழ்ந்து இடமெலாம் பரந்து சுழல் கிடப்பப் பார்த்து இரு சிலம்புகள் ஆரவாரிப்ப முட்டின்றி இனிய இன்பத்தை அனுபவித்துக் கழிக்கும் நாளில், தளிரியல் நிறம்வே றாகித் தையலாள் கருப்பம் எய்த வளமனை காப்போர் நோக்கி வாணனுக் குணர்த்த அன்னான் இளவலை அரிதிற் பற்றி இருஞ்சிறைப் படுத்தான் காணூஉ அளமரு மயிலின் தேம்பிப் பெண்கொடி அரற்றி வீழ்ந்தாள். 32 | மாந்தளிர் போலும் நிறம் வேறுபட்டு உஷை கருவுற்றமையைக் காவல் செய்வோர் உணர்ந்து வாணனுக் கறிவிக்க அவன் அநிருத்தனை அரிதிற் பற்றிச்சிறையிடக் கண்டு மனஞ்சுழல்கின்ற மயிலின் மெலிந்து பெண்கொடி கொழுகொம்பிலாது புலம்பி வீழ்ந்தனள். கண்ணன் போருக் கெழுதல் வீழ்ந்தயர் பொலங்கொ டிக்குத் துணையென விசும்பு நக்க வீழ்ந்துயர் கொடியும் அந்நாள் வெய்யகால் உதைப்ப இற்று வீழ்ந்தது வாணன் கொண்ட விழுத்தவப் பேறும் ஒக்க வீழ்ந்தது நிகழ்ந்த செய்கை வீணைமா முனிவன் ஓர்ந்தான். 33 | |