வாணேசப் படலம் 425


அட்டழல் கழல்மறவர் ஆகமிசை எஃகம்
பட்டபுழை நின்றிழிவ பாய்குருதி வெள்ளம்
ஒட்டலரை யான்உயிர் குடிப்பல்என ஒல்லை
உட்டிகழ் மறக்கனல் வெளிப்படு தொக்கும்.      60

     நெருப்பில் காய்ச்சி இயன்ற கழலினை வீக்கிய வீரர் மார்பிடை வேல்
துளைத்த துளைவழியினின்றும் செந்நீர்ப் பெருக்கு இழிதல், யான் பகைவர்
உயிரைப் பருகுவல் என விரைவில் உள்ளே திகழ்கின்ற வீரமாகிய தீ
வெளிப்படுவதனை ஒக்கும்.

கடுங்களிறு கைக்கதை சுழற்றிஎறி கால்தேர்க்
கொடிஞ்சியின் நிரைத்தகுரு மாமணிகள் உக்க
அடும்படை வலத்தினர் தெழித்தெழும் அதிர்ப்பின்
நெடுங்ககன மீன்நிரை நிலத்துகுவ மானும்.        61

     போர்க்களிறு கதாயுதத்தைச் சுழற்றி எறிந்தபோது தேர்க்கொடிஞ்சியிற்
பத்திபடப் பதித்த நன்னிறமுடைய பெருமை பொருந்திய மணிகள் உதிர்தல்
வீரர் உரப்பிவரும் அதிர்ச்சியினால் நீண்ட வானின் நட்சத்திரத் தொகைகள்
நிலத்தில் வீழ்வனவற்றை ஒக்கும்.

நீள்கொடி மிசைத்துகில் அனைத்தினும் நெடுங்கோல்
வாளிகள் பொதிந்தவை சிதர்ந்துவியல் வானின்
மீளிகள் அதிர்ப்பின்உயர் விண்மிசைய தாருத்
தாளதிர உக்கதழை போன்றன பறப்ப.           62

     நீண்ட கொடிகளிற் றுணிகள் எவற்றினும் நீண்டு திரண்ட அம்புகள்
செறிதலால் கிழிந்தவையுதிர்ந்து அகன்ற வானிலுள்ள மேகமுழக்கினைப்
போல வீரர்கள் அதட்டொலியால் உயர் விண்ணிலுள்ள ஐந்தருக்களின்
அடி அதிர்தலால் உதிர்ந்த தழைபோலப் பறப்பன.

கைப்படை இழந்தவர் எதிர்ந்தவர் கடாவும்
மெய்ப்படு பெரும்படை பறித்தெதிர் விடுப்பார்
எப்பொருளும் அற்றுழியும் ஏதிலர்கள் நல்கும்
அப்பொருள் கொளேங்களெனும் மானமுடை யார்போல்.   63

     கையிலுள்ள படைகளைப் பகைவர்மேல் வீசி உடம்பில் கோப்புண்டு
கிடந்த படையைப் பறித்துப் பகைவர்மேல், கைப்பொருள் முற்றும் இழந்து
வறியராகியபோதும் மானமுடையார் அயலவர் அன்பொடு கொடுக்கும்
பொருளையும் திருப்பி விடுதல் போல விடுப்பார்.

     நூழி லாட்டு: ‘கைவேல் களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல்
பறியா நகும்.’

வீடினர் வயப்பொருநர் வீடின இபங்கள்
மூடின நிலங்குருதி மூடின பிணங்கள்
கூடின கருங்கொடிகள் கூடின பருந்தும்
ஆடின மகிழ்ந்தலகை ஆடின கவந்தம்.       64