இதனையறிந்து இரண்டாம் வாயிலில் விற்றிருக்கும் இளங்குமரப் பெருமான் ‘யதுமரபினனே! வருக’ என்று கூறி வில்லை வளைத்துப் போரேற் றெழலும் தேன் பொருந்திய துழாய் மாலையோன் பூசனைபுரிந்து போற்ற அதனை ஏற்று ஆறுமுகப் பிரானும் மகிழ்ந்திருந்தனர். இருவர்களும் விடையளிப்ப எழில்மூன்றாங் கடைநண்ணி மருமலர்த்தார்க் கருங்கூந்தல் மலைமகளைக் கண்டிறைஞ்சித் திருவருள்பெற் றினிதேகத் திகழ்நாலாங் கடைமேவும் உருகெழுவெஞ் சினவெள்ளே றுயர்த்தபிரான் கண்டனனால். 73 | விநாயக சுப்பிரமணியப் பெருமானார் விடை கொடுப்ப அழகிய மூன்றாம் வாயிலை நண்ணி மணங்கமழும் மலர் மாலையைச் சூடிய கரிய கூந்தலுடைய உமையம்மையாரைக் கண்டு தாழ்ந்து திருவருளைப் பெற்று மேற்செல்ல நாலாம் வாயிலில் மேவும் அச்சஞ் செய்யும் கொடுஞ்சினமுடைய வெள்விடையைக் கொடியில் உயர்த்திய சிவபிரானார் நோக்கினர். முந்தைநாள் மைநாக முதுநாகத் தருந்தவஞ்செய் இந்தநா ரணற்கெம்மான் யானேவந் துடன்றாலும் மைந்துமிகு ஞாட்பின்கண் வாகைநீ பெறுகென்னத் தந்தவரம் பொய்யாமை பாதுகாத் தற்பொருட்டு. 74 | முற்காலத்தில் மைநாகமென்னும் பெரிய மலையில் அரிய தவத்தைச் செய்த இத்திருமாலுக்கு எமது பெருமான் ‘யானே எதிர்த்துப் பொருதாலும் வலிமை மிகுந்த போரில் வெற்றிமாலையை நீ எய்துக!’ என்று அருளிய வரம் மெய்யாய்ப் பயன் விளைதற் பொருட்டு. பினாகநெடுஞ் சிலைஏந்தி எதிர்நிற்பப் பெருந்திருமால் அனாதியாய் அனந்தமாய் ஆனந்த மாய்ஒளியாய் மனாதிகளுக் கெட்டாத வான் கருணைப் பரம்பொருளைத் தனாதுவிழி களிகூரக் கண்டெய்தித் தாழ்ந்தெழுந்தான். 75 | பினாகம் என்னும் நெடிய வில்லை ஏந்தி முன்னர் நிற்றலும் பெருமையுடைய திருமாலாகிய கண்ணபிரானார் தோற்றமின்மையின் அநாதியாய், அழிவின்மையின், அனந்தமாய் நிறைந்த இன்பனாய், ஒளியாய் அமைந்த மன முதலிய கரணங்களைக் கடந்த பெருங்கருணைப் பரம்பொருளைத் தன்னுடைய கண்கள் களிகூரக்கண்டு கண்டு நெருங்கித் தாழ்ந்தெழுந்தனர். நாத்தழும்பப் புகழ்பாடி நளினமலர்க் கைகூப்பிச் சோத்தெந்தாய் எனச்சொல்லி இமையவர்க்கே அருள்சுரந்து காத்தருளுங் கடன்உடையாய் கண்ணோடா அவுணர்குலத் தீத்தொழிலான் றனைவெல்லத் திருவருள்செய் எனக்கென்றான். 76 | நாவானது தழும்பேறும்படி பொருள்சேர் புகழைப் பாடித் தாமரை மலர் போலும் கைகளைக் குவித்துச் ‘சேரத்தம் எந்தையே!’ |