வாணேசப் படலம் 431


     தக்கன் இயற்றிய யாகத்தை நும்மால் தோற்றுவிக்கப்பட்ட ஒப்பற்ற
வீரபத்திரர் புகுந்து அழித்த நாளில் யானும் ஏனைய தேவர்களும்
தண்டிக்கப்பட்டு பட்டபாட்டினை எடுத்தியம்பப் புகின் அடங்காதுமிகும்.
உமக்கு இந்நிகழ்ச்சிகள் திருவிளையாடற் செய்கைகளேயாகும்.

அற்றமுற வெகுண்டுவரும் அடற்கங்கை வீறடக்கும்
கற்றைநெடுஞ் சடையாய்மற் றெனைமுனியக் கருதினையேல்
சற்றுநீ முகம்நிமிர்த்து நோக்கின்அது சாலாதோ
வெற்றிமலர்த் திருக்கரத்துப் படைக்கலமும் வேண்டுமோ.  84

     ‘உலகிற்குக் கேடுண்டாகச் சினந்து வரும் வலிய கங்கையின்
இறுமாப்பினை அடக்கிய தொகுதியை யுடைய நீண்ட சடையுடையோய்!
என்னை வெகுண்டழிக்கத் திருவுளம்பற்றினால் சிறிது நீ திருமுகத்தை
நிமிர்ந்து நோக்கினால் அதுவே போதுமே. வெற்றி வாய்ந்த மலர் போலும்
திருக்கரத்துப் படைக்கலமும் தாங்குதல் வேண்டுமோ?

     கங்கையின் செருக்கடக்கிப் பிறையை வாழ்வித்தபெருமான் என்க.

வடிவாளி விடையேறு மனைவியென நினக்குறுப்பாம்
அடியேனை எதிர்ப்பதுநின் அருட்பெருமைக் கொல்லுவதோ
குடியோடும் எனையடிமை கொண்டாய்இன் றெனக்கிரங்காய்
கடியாழி விடம்அயின்ற கண்டாநின் அடிபோற்றி         85

     கூரிய அம்பாகவும், விடையாகவும், மனைவியாகவும், தேவரீருக்கு
அங்கமாம் அடியேனை எதிர்த்துப் பொருவது நும் அருட்பெருக்கிற்கு
இயைவதோ? வழி வழி யெல்லாம் என்னை அடிமை கொண்டவனே!
இப்பொழுதெனக் கிரங்கி அருள் செய்யாய், பாற்கடலிற் றோற்றிய கடிய
வேண்டிய விடத்தை உண்டு உயிர்களைக் காத்த திருநீலகண்டனே! நும்
அருள் எம்மைக் காக்க.

     அங்கத்தை அங்கி அழிப்பதோ என்றனர். ‘‘இடபமதாய்த் தாங்கினான்
திருமால்காண் சாழலோ’’ எனவும், ‘அரியலால் தேவியில்லை’’ எனவும்
வருவன காண்க,

கண்ணனும் கடவுளும் கைகலத்தல்

என்றென்று பலமுறையும் இரந்திரந்து தொழுதிறைஞ்சும்
குன்றெடுத்த குடையானுக் கெங்கோமான் இதுகூறும்
மன்றநீ வெருவலைநின் மனக்கவலை ஒழிகண்டாய்
அன் றுனக்கு மைநாகத் தளித்தவரம் மறந்தனையோ.    86

     பலப்பல எடுத்தோதிப் பற்பல்கால் குறையிரந்து தொழுது தாழும்
கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்ட கண்ணபிரானுக்கு எமது
பெருமான் இதனைக் கூறுவர். நிச்சயமாக நீ அஞ்சாதே நின்மனக்
கவலையை விடு. அந்நாள் உனக்கு மைநாகமலையில் வழங்கிய வரத்தை
மறந்தனையோ.’