வாணேசப் படலம் 433


மண்டும் ஓதையின் மற்றவர் சினக்கனல் புறநீர்
கொண்ட விப்பவான் வழிதிறந் தாலெனக் குலையா
அண்டம் விண்டது புடவியும் விண்டதப் பெருநீர்
உண்டல் வேட்கையின் உணங்கிவாய் பிளந்தமை ஒப்ப.    91

     செறியும் பேரொலியால் அவர்தம் வெகுளித் தீயைப் பெரும்புறக்
கடல்நீரைக் கொண்டழிக்க வான் வழியைத் திறந்தாற் போல நிலைகுலைந்து
அண்டம் பிளந்தது; அப்பெரு நீரைப் பருகும் விருப்பினால் வாய்புலர்ந்து
வெடித்தமை ஒப்பப் புவியும் பிளந்தது.

சிலையின் நாணொலிக் கிளர்ச்சியால் திண்புவி அதிர்வுற்
றலையும் ஊதையின் ஆழிமா னுடம்மரம் பறவை
பலவும் தத்தமுள் மோதுபு தெளிதரப் பயிற்றும்
தலைவர் எப்படி அப்படி உலகெனுந் தகுதி.        92

     விற்களின் நாணொலி எழுச்சியால் திண்ணிய பூமி ஆட்டங்கொண்டு
அலையும் காற்றினால் கடலும், மக்களும், மரங்களும், பறவைகளும்,
வேறுள்ள பலவும் தம்முள் தம்முள் தாக்குண்டு தலைவர் எப்படி அப்படி
உலகெனுந் தன்மையை ஐயமில்லையாகத் தெளிதரக் காட்டும்.

     ‘அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகள்’ விசுவனும் விசுவ நாதனும்
போர்புரிதலின் உலகமும் மோதுவதாக உரைத்தனர்.

மூள்சி னத்துடன் அடுத்துழி முதல்வன்என் றறிந்து
மீள் நோக்கியாங் கெம்பிரான் சரணமுன் வீழ
நீள்பெ ருந்தடங் குனிவரிச் சிலையிடை நெடியோன்
வாளி ஒன்றுதொட் டேயினன் அருச்சனை மாண்பின்.   93

     கண்ணபிரான் முதிர்கின்ற சினத்தீயுடன் அடுத்த வழியும் மறித்துணர்வு
தோன்றி முதல்வனென மதித்து அவ்விடத்து நீண்ட மிகப் பெரிய வில்லை
வளைத்து நாணேற்றி ஓரம்பினை அப்பிரான் திருவடிகளின் முன்னர்
வீழும்படி அருச்சனை செய் முறையின் ஏவினன்.

அருச்சுனன் துரோணரை அருச்சித்தமை பாரதத்துட் காண்க.

சத்தி சத்திமான் ஆகிய இருதிறத் தவருந்
தொத்த ழற்கணை தூண்டினர் மூண்டது பெரும்போர்
பைத்த மாநிலம் அயிர்த்தது பனிவிசும் பிறுத்தார்
சித்தர் சாரணர் இமையவர் இயக்கர்கந் திருவர்.     94

     சத்தியும் சத்திமானும் ஆகிய இருவரும் கொத்தாகிய தீயை உமிழும்
அம்புகளைச் செலுத்தினர் பெரிய போர் முதிர்ந்தது. பசிய மாநிலத்தவரும்
ஐயமுற்றனர்; குளிர்ந்த விண்ணிலுள்ளவராகிய சித்தர், சாரண இமையவர்,
இயக்கர், கந்திருவர் ஆகியோரும் ஐய முற்றனர்.

     திருமால் சிவபிரானுக்குச் சத்தியாதல், மனைவியென நினக்குறுப்பாம்,
என 85-ஆம் செய்யுளிற் காண்க.