திருஓணகாந்தன் தளிப் படலம் 439


     பகைவர் வணங்கும் வாணனுடைய ஒப்பில்லாத சேனைத் தலைவராய்
அறநெறியின் வழுவாதொழுகிய அசுரர் இருவர் ஓணன் காந்தன் என
விளங்கினர்.

வன்பு பூண்ட மனவ கப்படா
என்பு பூண்ட இறைவர் தம்மடிக்
கன்பு பூண்ட அறிவின் மேலவர்
துன்பு பூண்ட தொடர்பு நீக்குவார்.              3

     அன்பில்லாத வன்னெஞ்சினைக் கடந்து நின்ற எலும்பை மாலையாக
அணிந்த இறைவர் தம்மடிக் கன்புபூண்ட அறிவினால் மேலோராய்த்
துன்புடைய பாசத் தொடர்பினை விலக்குவாராய்,

     இறைவனுடைய அழிவின்மையையும் பிரம விட்டுணுக்களின்
பிறப்பிறப்பையும் உணர்த்தி உய்யக்கொள்ளும் அடையாளமாவன என்பு
மாலைகள்.

ஓங்கு காஞ்சி ஊரை நண்ணினார்
தேங்கு தெண்ணீர்த் தீர்த்தந் தொட்டனர்
பாங்கி லிங்கம் பதிட்டை செய்தனர்
ஆங்கண் அன்பிற் பூசை ஆற்றினார்.            4

     உயர்ந்த காஞ்சி நகரை அடைந்தனர். நீர் நிறைந்த தடாகம்
வகுத்தனர். அதன் மருங்கில் தனித்தனியாகச் சிவலிங்கந் தாபித்தனர்;
அன்பொடும் பூசனை புரிந்தனர்.

ஆற்றும் இருவர் அன்பு நோக்கிய
நீற்று மேனி நிமலன் அம்மையோ
டேற்றின் மேலாற் காட்சி ஈதலும்
போற்றி இன்பப் புணரி மூழ்கினார்.             5

     புரியும் ஓண காந்தர் தம் அன்பினை நோக்கிய நீறணி மேனியராய
விமலர் உமையம்மையாரொடும் விடைமேற் றிருக்காட்சி வழங்கலும் போற்றி
செய்தின்பக் கடலுள் திளைத்தனர் அவர்.

கரைஇல் காதல் கைமி கத்தொழும்
புரைஇ லார்க்குப் பொங்கு வெள்ளிமால்
வரையி னார்இன் னருள்வ ழங்கிநீர்
உரைமின் வேட்ட வரம்என் றோதினார்.         6

     எல்லையில்லாத அன்பு பெருகத் தொழும் குற்றமற்றவர்க்கு மிகுகின்ற
இனிய அருளைக் கயிலை மலையார் நல்கி நீவிர் விரும்பிய வரங்களைக்
கேண்மின்’ என்றோதினார்.

கைகள் கூப்பிக் கண்கள் நீர்உகச்
செய்ய பாதந் தொழுது செப்புவார்
ஐய னேமெய் யறிவு தந்தெமை
உய்யக் கோடி உனக்க டைக்கலம்.               7