440காஞ்சிப் புராணம்


     கரமலர் மொட்டித்துக் கண்கள் நீர் பாய நின்று சிவந்த திருவடி
மலர்களைத் தொழுது கூறுவார்; ‘ஐயனே! மெய்யறிவைத் தந்தருளிப்
பிழைக்குமாறுஏன்றுகோள். அஞ்சினோம் ஆகலின் அடைக்கலம்புக்கேம்.’

இனைய தீர்த்தம் ஆடி எம்பெயர்
புனைஇ லிங்கம் போற்றப் பெற்றவர்
நினைவு முற்றும் நிரப்பி ஈண்டுநீ
எனைய நாளும் இனிது வைகுவாய்.              8

     ‘இத்தீர்த்தத்தில் மூழ்கி எம்முடைய பெயரோடும் விளங்கும் ஓணேசப்
பிரான் காந்தேசப் பெருமான் எனப் பெறும் இவ்விலிங்கத்தில் நின்னைத்
துதி செய்தோர் நினைவில் எழும் போகங்கள் முற்றவும் நிரப்பி இத்
தலங்களில் நீ எந்நாளும் இனிது வீற்றிருப்பாய்,’

என்று போற்றும் இருவர்க் கன்னவை
மன்றல் ஒற்றை மாவின் நீழலான்
நன்றும் அங்கண் நல்கி வைகினான்
அன்று தொட்டஃ தற்பு தத்தலம்,                9

     என்று போற்றி வேண்டும் இருவர்க்கும் அவற்றை வழங்கி மணங்கமழ்
ஒற்றை மாமரத்தின் நீழலாராகிய திருவேகம்பநாதர் அவர்கள் விரும்பிய
இவ்விடங்களிற் பெரிதும் விளங்கி வைகினர். அந்நாள் முதலாக அத்தலம்
வியப்பினதாகும்.

திருஓணகாந்தன் தளிப் படலம் முற்றிற்று

ஆகத் திருவிருத்தம்-1470

சலந்தரேசப் படலம்

கலி விருத்தம்

ஓணனார்க் கரியவர் ஓணகாந் தன்தளி
நீணகர் மேன்மையைத் தெரிந்தவர் நிகழ்த்தினாம்
மாணமர் காட்சிசால் மற்றதன் வடதிசைப்
பேணிய சலந்தரே சத்தியல் பேசுவாம்.            1

     திருவோண நாளுக்குரிய திருமாலுக்கரியவர் திருவோண காந்தராகிய
அசுரர்க்கன்பினால் எளியராய் வெளிப்பட்ட திருக்கோயில்களின்
பெருமையைத் தெரிந்தவாறு நிகழ்த்தினோம். இனி, மாட்சியமர் காட்சி
நிரம்பிய வடக்கில் உள்ள அத்தலத்தை விரும்பி வழிபாடுசெய்த
சலந்தரேசத்தின் வரவைப் பேசுவோம்.