‘தணிவொன்று மனம் உடையார்’ முதலிய திருப்பெயர்கள் எட்டும் ஆயிரம் திருப்பெயர்க் கொப்பனவாம் உளங்கொள்வாய்’ என்றருளினார். பரபரப்பு நீங்கி அமைதியுடையோர் புகழ் தீண்டச் சிவந்தபிரான், சாதரூபம் என்னும் பொன்வடிவினர், நீல மணியை ஒக்கும் கண்டமுடையவர், வற்றாத பெருங்கருணையர், பவள மலையை ஒக்கும் செம்மேனியர், வருத்தம் தவிர்த்தார், பாசநோயை விடுக்கும் வேத சாகைகளுக்குத் தலைவர், திருமாலுக்குச் சக்கரப் பேற்றினை யருளியவர். நம்பிரான் வாய்மலர்ந்த மொழிகேட்டுப் புண்டரிக நயனத் தோன்றல், செம்பதுமத் தாள்இறைஞ்சி சென்னிமிசைக் கரங்கூப்பிச் செந்நின் றேத்தி, எம்பிரான் இந்நகருட் கணப்பொழுது வதிந்தவர்க்கும் இறைவா வாழ்க்கை, உம்பர்வீ டளித்தருளாய் இன்னும்ஒரு வரம் அடியேற் குதவாய் என்று. 16 நம் தலைவர் அருளிய திருவாக்கைக் கேட்டுப் பதுமாக்கனார் செந்தாமரை மலர் போலுந் திருவடிகளை வணங்கிச் சிரமிசைக் கரங்கு வித்து நேர்நின்று துதித்து ‘எம்பெருமானே! இந்நகர்க்கண் கணப்பொழுது தங்கினவர்க்கும் அழிவில்லாத வாழ்க்கையாகிய வீட்டுலகத்தை அளித்தருளாய், மேலும், ஓர் வரத்தை அடியேற்குதவாய்’ என்று, வள்ளலே என்பூசை கொண்டருளும் இவ்விலிங்கம் வணங்கப் பெற்றோர், பள்ளநீர் வரைப்பின்உள சிவலிங்கம் எவ்வெவையும் பணிந்த பேறு, கொள்ள அருள் எனவேண்ட வேண்டுவார் வேண்டியதே கொடுக்கும் எங்கோன், எள்ளருஞ்சீர் நெடியோனுக் கவையனைத்தும் அருள்செய்தவ் விலிங்கத் துற்றான். 17 ‘வள்ளலே என்னுடைய பூசனையைக் கொண்டருளும் இச் சிவ லிங்கத்தை வணங்கினோர் கடல்சூழுலகில் உள்ள சிவலிங்கங்கள் அனைத்தையும் வணங்கிய வாழ்வின் பயனைக் கொள்ள அருளுக’ என வேண்ட. வேண்டுவார் வேண்டியதே கொடுக்கும் எம்மானார் புகழற்குரிய திருமாலுக் கவற்றை முற்றவும் அருள்செய் தவ்விலிங்கத்துட் புக்கார். கொழிக்குமணித் தடந்திரைநீர் இலஞ்சி தொறும் இனவாளை குதித்துப் பாயச், செழிக்கும்வளம் பொழிற்காஞ்சிப் பலதளியுள் மேதகைய திருமாற் பேற்றின், வழிச்செலவின் ஒருபோது வதிந்தவரும் மாறாத பிறவிப் பாசம், ஒழிப்பரெனில் எஞ்ஞான்றும் அங்குறைவோர் தமக்கினியென் உரைக்கு மாறே மணிகளைக் கொழிக்கும் பேரலைகளையுடைய நீர்நிலை தொறும் வாளை மீன்கள் துள்ளித் தாவ வளம் தழைக்கும் சோலை சூழ்ந்த காஞ்சியிலுள்ள பல திருக்கோயில்களுள் மேன்மை பொருந்திய திருமாற்பேற்றில் |