காட்டினை வெட்டி வீழ்த்தும் பரசிராமன் எனத் தங்குநாளில் தாயினிடத்து ஓர் குற்ற முதிர்ந்த தீங்கினை அறிந்து தந்தையார் தன்னை ஏவ, நாடித் தெளிந்து. நவம்-புதுமை. தாதைமொழி கடவாமை தருமமெனத் தனைஈன்று வளர்த்த தாயை, ஏதமுறக் கொலைசெய்து முனிஅருளால் மீண்டுய்ய எழுப்பி நின்றான், மேதகைய முனிமகிழ்ந்து வெகுளிதனை அறவிடுத்துச் சமாதி மேவும், போதவனை வெகுண்டெய்திக் காத்தவீ ரியன்கோறல் புரிந்தான் மன்னோ. 3 தாதையார் மொழி வழி நிற்றல் தருமமெனத் தன்னைப் பயந்து வளர்த்த தாயாரைக் குற்றப்படக் கொலை செய்து அத்தந்தையின் அருளாற்றலால் மீண்டுயிர் பெற எழுப்பி அவராணையில் நின்றனன். சமதக்கினி முனிவர் மகிழ்ந்து கோபத்தை முற்றவும் கைவிட்டு நிட்டையிற் பொருந்துங் காலைக்காத்தவீரியன்சினங்கொண்டு அவரைக்கொன்றனன். பரசிராமன் தவம்புரிதல் மிடல்படைத்த திறல்திண்டோள் இராமன்அது நோக்கிநெடு வெகுளி, மீக்கொண், டடல்படைத்த வயவேந்தர் குலமுழுதும் இறுப்பேன்என் றார்த்துப் பொங்கிக், கடல்படைத்த விடமயின்றோன் அருள்வேண்டி விரைந்தெய்திக் கலந்தார் தங்கள், உடல் படைத்த பேறெய்துங் காஞ்சியின்ஓர் இலிங்கம் அமைத்தருச்சித் தேத்தி. 4 உள வலிமையும், வலிமையும் திண்மையும் அமைந்த தோளும் உடைய இராமன் அதனை நோக்கிப் பெருஞ்சினம் மேலிட்டு வனபடை கொண்ட வலிய வேந்தருடைய மரபு முழுவதையும் அழிப்பேன்’ என்றாரவாரித்துக் கிளர்ந்து கடல் தோற்றுவித்த விடத்தை உண்டோன் அருளைப் பெற விரும்பி விரைந்தடைந்து சேர்ந்தார் உடம்பு படைத்த பயனை அடைதற்கு இடனாகிய காஞ்சியின்கண் ஓரிலிங்கம் அமைத்தருச்சித்தேத்தி, ஆற்றரிய தவம்ஆற்றி ஐம்புலனும் அகத்தடக்கி அமர்ந்தானாகக், கீற்றிளவெண் பிறைக்குழவி தவழுநெடுஞ் சடிலமுடிக்கிழவோன் அந்நாள், மாற்றரும்பே ரருட்கருணை கூர்ந்தருளி அவன்அன்பின் வாய்மை காண்பான், தோற்றமுறு மறைதேறாத் திருவடிகள் நிலந்தோய வருகின் றானால். 5 ஐம்புலன்களையும் புறஞ்செல்லாது அகத்தில் அடக்கிச்செய்தற்கு எளிதாகாத தவத்தைச் செய்து கொண்டிருந்தனனாக, இனிப்பிறை தவமும் சடை முடிப் பெருமானார் அப்போது திரிபில்லாத பேரருட் கருணை கொண்டு அவன் உண்மை அன்பினைக் காண்பான் விளக்கமிகும் வேதங்கள் காணாத திருவடிகள் நிலத்தில் தோய எழுந்தருளுகின்றனர். |