பெருமான் புலையனாய் வருதல் கலி விருத்தம் மால்வரை ஈன்ற வயங்கிழை மாதும் நூல்வரை மார்புடை நோன்றகை மாவும் வேல்வலன் ஏந்திய வித்தக னுந்தன் போல்வடி வந்தழு விப்புடை நண்ண. 6 | விளங்கிழை அணிந்த உமை அம்மையாரும், முப்புரி நூல் பொருந்திய மலை போலும் மார்பினையுடைய வலிய தும்பிக்கையுடைய யானையாகிய விநாயகப் பிரானும், வேலை வலக்கரத்தேந்திய முருகப் பெருமானும், தன்னையொப்பப்பொய்ப் புலை வடிவங்கொண்டுடன் வரவும் நான்மறை வள்ளுகிர் நாய்புறஞ் சூழக் கான்மலர் சேர்த்த செருப்பெழில் காட்ட ஊன்மலி காழக மீதில் உறுத்த தோன்மலி கச்சணி தோன்றி விளங்க. 7 | நான்கு வேதங்களாகிய கூரிய நகங்களையுடைய நாய்கள் புறஞ்சூழவும், அடி மலரிற் சேர்த்த செருப்பின் அழகு விளங்கவும், சிதைந்த கரிய உடை மீதில் யாத்த தோலாலாகிய உதர பந்தனம் புலப்பட்டுத் தோன்றவும், வாசனையுடைய மலரென்னும் பொருள் தரக் கான் மலர் என வந்தது நயம். ஏரியல் கொண்ட சுவல்மிசை இட்ட வாரினன் உட்குந டையினன் மாணாச் சீரியல் கோக்கொலை செய்புலை யன்போல் ஆரிருள் மைத்தன மேனிய னாகி. 8 | அழகுடைய தோளில் இட்ட வார்களையுடையவன்; கண்டோர் அஞ்சும் நடையை யுடையவன்; சிறப்புப் பொருந்திய பசுக்களை இழிவுறக் கொலை செய்யும் புலையனைப்போலச் செறிந்த இருள் மேலும் கறுத்திடுதலொத்த மேனியனாகி, வெங்கதிர் உச்சியின் மேவிய காலை அங்கலுழ் பூம்புனல் ஆற்றிடை எய்திப் பங்கமில் செய்வினை பான்மை தொடங்கும் புங்கவ மாதவன் றன்னெதிர் போந்தான். 9 | சூரியன் உச்சியில் மேவிய நடுப்பகலில் அழகு பெருகுகின்ற பூக்கள் நிரம்பிய பாலியாற்றிடை இறங்கிக் குற்றமில்லாத செயல்களாகிய நீர்க் கடனைத் தொடங்கும் பெருந்தவனாகிய உயர்ந்தவன்முன் போந்தனன். |