462காஞ்சிப் புராணம்


பரசிராமன் துன்புறுதல்

மறையொ ழுக்கம் வழாநெறி வாய்மையோர்க்
கிறைவ னாம்முனி வன்குலத் தெய்தினேன்
நிறைய வேதமும் அங்கம் நியாயமும்
முறையின் ஓதினன் மூவறு கல்வியும்            39

     ‘வேத வொழுக்கத்தி னின்றும் வழுவாத உண்மையாளர்க்குத்
தலைவராகும் முனிவர் மரபிற் பிறந்தேன். வேதங்களும், அங்கங்களும்,
நியாய நூலும் பதினெண் புராணமும் முறைப்படி முற்றவும் ஓதினேன்.’

பன்னெ டும்படை யாவும் பயின்றுளேன்
இன்ன னாய எனக்கிது காலையின்
முன்னை வல்வினை மூட்சி விளைந்தவா
றென்ன பாவம் எவர்இது தாங்குவார்.           40

     ‘போர்க்குரிய படைக்கலப் பயிற்சி யுடையேன். கற்றுத் துறை போய
எனக் கிதுபோதில் முற்பிறப்புக்களிற் செய்த தீவினைமுதிர்ச்சியின் பயனாய்
வெளிப்பட்ட வகை என்னே போலும்! எவரே என்போல இத்துணை
இடும்பைக்கிலக்காவர்.’

என்னை ஈன்றவள் வெம்பழி எய்துறீஇக்
கொன்னும் என்னாற் சிரங்குறை பட்டனள்
பின்னர் எந்தையும் பேதை அரசனால்
சென்னி இற்றுச் சிதைந்தனன் அம்மவோ.       41

     ‘என்னைப் பயந்த தாய் கொடிய பழி சுமந்து வருந்தும் என்னாற்றலை
அறுபட்டனள். பின்னர் என்றந்தையும் அறிவிலியாகிய காத்த வீரியனால்
சிரமிழந்து உயிர் விட்டனன். அந்தோவே!

ஈண்டு மற்றும் இழிஞன் புலைக்கரந்
தீண்டி என்னை அவமதி செய்திட
மூண்ட வெம்பழி மூழ்கியும் ஐயவோ
மாண்டி லேன்உயிர் வல்வினை யேனரோ.       42

     ‘மேலும் இத்தவ நிலையினும் புலையன் றன்னுடைய இழிந்த
கரங்களால் தீண்டி என்னைப் பழித்திட, முதிர்ந்த கொடிய பழிகளில்
மூழ்கியும் ஐயகோ! உயிர் விடுகிலேன் தீவினையேன்!’

கவள மாகக் கடல்விடம் உண்டருள்
சிவனை ஏத்துநர் செல்லல் உறார்களால்
பவன்அ டித்துணை பற்றியும் என்இடர்க்
கவதி கண்டிலன் அற்புதம் அற்புதம்.          43

     கடலில் உதித்த விடத்தைக் கவளம்போல உண்டருள் செய்
சிவபிரானைப் போற்றுநர் துன்பம் அடையார்கள். பிரான் அடித்துணையைப்
பற்றியும் என் துன்பத்திற்கு முடிவு காண்கிலேன். வியப்பிது வியப்பிதே!