| 		| மற்றெமக் கினிய மூதூர் வளம்பயில் காஞ்சி அங்கண் உற்றெமை வழிபட் டேத்தி ஊங்குவை பெறுகென் றெங்கோன்
 சொற்றலும் விரைந்து காஞ்சித் தொன்னகர் எய்திக் காமன்
 அற்றமில் சருவ தீர்த்தத் தடந்திரை அலைக்குங் கோட்டின்.   5
 |       ‘எமக்கு விருப்புடைய பழைய நகரம் வளம் நிலவு காஞ்சிஆகலின்     அங்கண் எய்தி வழிபாடியற்றி அவற்றைப் பெறுக’ என எம்பிரானார்
 அருளாலும் மன்மதன் காஞ்சியை அடைந்து குற்றமில்லாத சருவதீர்த்தத்
 திரைமோதுகின்ற கரையில்,
 		| தவாதபே ரன்பிற் காமேச் சரன்றனை இருத்திப் போற்றி உவாமதி முகத்து மென்றோள் ஒள்ளிழை உமையாள் தன்னைக்
 கவான்மிசைக் கொண்ட பெம்மான் கண்ணருள் சிடைத்து நெஞ்சத்
 தவாவிய பேறு முற்றும் அந்நிலை எய்தி னானால்         6
 |       இடையறாத பேரன்பினால் காமேச்சரப் பெருமானை நிறுவிப் போற்றிப்    பௌர்ணிமை  நாளின் முழுமதியை ஒக்கும் திருமுகமும், மெல்லிய தோளும்,
 விளக்கமடைந்த அணிகளும் உடைய உமையம்மையைத் துடைமேற்கொண்ட
 பெருமானார் கடைக்கண் நோக்கினைப் பெற்று நெஞ்சில் விரும்பிய
 பேறுகள்யாவும்  அந்நிலையே பெற்றான்.
 		| ஏதமில் உயிர்கள் எல்லாந் தோற்றுதற் கேது வாகிக் கோதறத் தானம் ஈவோன் கொள்பவன் தானுந் தானாய்
 மேதகும் இறைமை பெற்று விளங்கினான் மறையோர் ஏற்கும்
 போதுளத் தவனை எண்ணிற் புரைதவிர்ந் துய்வார் அன்றே.   7
 |       குற்றமில்லாத உயிர்கள்யாவும் பிறப்பதற்குக் காரணனான காமனாகியும்,    குற்றமறத் தானம் கொடுப்போனும்ஆகி, கொள்வோனும் தானேயாய்
 மேன்மை பொருந்திய தலைமையனாகியும் விளங்கினான். ஆகலின், வேதியர்
 தானம் ஏற்கும்போது காமனை எண்ணினால் ஆசையாகிய குற்றம் தவிர்ந்து
 கடைத்தேறுவார். ஆவர்.
 தீர்த்தேச்சரம்	 		| பரவினோர் விழைந்த காமப் பயன் அளித் தருளுங் காமேச் சரநகர் வந்த வாறு சாற்றினம் இதன்பா லாகப்
 பரிதிமான் தடந்தேர் ஈர்க்கும் பரிக்குளம் பிடறிப் போய
 திருமணிச் சிகரக் கோயில் வழங்குதீர்த் தேசம் உண்டால்.  	          8
 |       வழிபட்டோர் விரும்பிய காமியப் பயனை அளிக்கும் காமேசர்     திருக்கோயில் தோற்றிய முறையைக் கூறினோம்; இனி, சூரியன் தனக்குரிய
 பெரிய தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளின் குளம்பிடறிய, உயர்ந்த
 மணிகள் குயிற்றிய சிகரமுடைய கோயில் விளங்குகின்ற தீர்த்தேசம் என்பது
 உள்ளது.
 |