484காஞ்சிப் புராணம்


சருவதீர்த்தப் பெருமை

தந்தையைச் செகுத்த பாவம் தணந்தனன் பிரக லாதன்
முந்தையோர்ச் செகுத்த பாவம் வீடணன் முழுதுந் தீர்ந்தான்
மைந்துடைப் பரசி ராமன் வீரரை வதைத்த பாவஞ்
சிந்தினன் சருவ தீர்த்தச் செழும்புனல் குடைந்த பேற்றால்    17

     பிரகலாதன் தந்தையாகிய இரணியனைக் கொன்ற பாவத்தையும்,
விபீடணன் தமையன்மாராகிய இராவண கும்ப கருணர்களைக் கொன்றமையால்
நேர்ந்த பாவத்தையும், வலியமைந்த பரசிராமன் அரசரைக் கொன்ற
பாவத்தையும் சருவதீர்த்தத்தில் மூழ்கிய புண்ணியப் பயனால் யாவரும்
நீக்கிக்கொண்டனர்.

அருச்சுனன் துரோண மேலோ னாதியர்ச் செகுத்த பாவம்
பிரித்தனன் அசுவத் தாமன் பெருங்கருச் சிதைத்த பாவம்
இரித்தனன் உலகில் இன்னும் எண்ணிலர் சருவ தீர்த்தத்
திருப்புனல் குடைந்து தீராக் கொலைவினைத் தீமை தீர்ந்தார்.   18

     அருச்சுனன் துரோணர் முதலாம் ஆசிரியர்களைக் கொன்ற
பாவத்தையும், அசுவத்தமான் சந்திரகுலத்தரசர் மனைவியரின் கருவெலாம்
சிதைத்த பாவத்தையும் இத்தீர்த்தத்தால் போக்கிக் கொண்டனன். மேலும்,
உலகில் எண்ணிலார் சருவ தீர்த்தத் தெய்வநீரில் மூழ்கிக் கழுவாயில்லாத
பாவங்களும் கழுவப் பெற்றனர்.

சிலைநுதல் மகளிர் மைந்தர் இன்றும்அத் தெண்ணீர் மூழ்கின்
கொலைவினைப் பாவந் தீர்வார் குரைகடற் பரப்பென் றெண்ணித்
தலைவரு முகிலின் கூட்டந் தனித்தனி வாய்ம டுக்கும்
அலைபுனல் சருவ தீர்த்தப் பெருமையார் அளக்கற் பாலார்.    19

     மகளிரும், ஆடவரும் இன்றும் அந்நீரில் மூழ்கினால் கொலை செய்த
பாவமும் நீங்குவர். ஒலிக்கின்ற கடலென எண்ணி மேகக் கூட்டங்கள்
தனித்தனி பருகும் அலைகளையுடைய சருவதீர்த்தப் பெருமையை யாவர்
அளக்க வல்லவர்?

கங்காவரேச்சரம்

மற்றதன் கரையின் கீழ்பால் வருணன்எம் பெருமான் றன்னை
முற்றிழைக் கங்கை யாளோ டிருத்திமுன் தொழுது நீருள்
உற்றுறை உயிர்க்கும் நீர்க்கும் ஒருதனித் தலைவ னாகப்
பெற்றனன் அதன்பேர் கங்கா வரமெனப் பிறங்கு மாலோ.   20

     அத்தீர்த்தத்தின் கிழக்குக் கரையில் வருணன் எமது பெருமானைக்
கங்கையாளோடும் தாபித்துத் தொழுது நீரில் வாழுயிர்களுக்கும், நீர்க்கும்
ஒப்பற்ற தனித் தலைமையை எய்தினன். அத்தலைப் பெருமானார்
கங்காவரேசுரர் எனப்பெயர் பெறுவர். பிறங்கல்-விளங்குதல்.