திருநாட்டுப்படலம் 49


விளங்கக் கண்டோர் விளக்கமமைந்த வயலும் பவளக் கொடியை ஈன்றது
என்னை என்பார். இவ்வியல்பு அழகு செய்யும் ஓர்புறம்.

     மருதத்தொடு நெய்தலும், நெய்தலொடு மருதமும் மயங்கும் மயக்கம்
இதனாற் கூறப்பட்டது.

     இடை-நடுஇடம்; அரை. சிற்றிடம் என்னும் பொருளும் ஆம். ‘நுதல்
அடி நுசுப்பென மூவழிச் சிறுகி’ (கலித்-)கடி-நீரைக்காப்புக்கொண்ட.

     வரைப் புறத்துப் பசுங்கிளியுங் கான்குயிலும் உடன்ஆன்பால்
மடுத்துப் புட்கள், இரைத்தெழுபூம் பணைமருதச் சேக்கைமிசை
எதிரெதிருற் றிசைகள் பாடும், நிரைக்குடுமி வரைப்பகடும் வயற்பகடுங்
கரும்பொடித்து நெரித்து மாந்தித், திரைத்தடநீர்க் கான்யாற்றுத்
திளைத்தாடி உடனுறங்குஞ் செவ்வித் தோர்பால்.           138

     மலையிற் பயிலும் பசிய கிளியும், முல்லை நிலத்துக் குயிலும்
ஒருங்கிருந்து பசுவின் பாலைப் பருகிப் பறவைகள் ஒலிக்கின்ற
பூக்களையுடைய தழைத்த மருத மரமாகிய தங்குமிடத்திலிருந்து மாறி
மாறிக் கூவும்.

     களிறுகளும், கடாக்களும், கரும்புகளை ஒடித்து நெரித்துச் சுவைத்துக்
காட்டாற்றில் படிந்து மூழ்கி ஒரு சேரத் துயில் கொள்ளும் இயல்பிற்று
ஓர்புறம்.

     குறிஞ்சி, முல்லை, மருதங்களின் மயக்கம் கூறப்பட்டது. கிளி, பகடு-
குறிஞ்சிநிலக் கருப்பொருள். குயில், கான்யாறு-முல்லை நிலக்கருப் பொருள்.
பால், புட்கள், மருதம், பகடு கரும்பு-மருதநிலக்கருப்பொருள்.

     புறவகத்த குமிழ்ம்போதுங் கழிக்கானல் கைதைதரும்
பொலங்கேழ்ப் பூவுந், தறைபொறுத்த வரைதோன்றித் தண்மலர்மேல்
இருபுடையுந் தாங்கி நின்றே இறைவனுக்காம் மலர்மோந்தாள்
மூக்கரிந்து சுரிகையுடன் ஏந்தி அந்நாள், முறைநிறுத்த செருத்
துணையார் நின்றநிலை காட்டிவளம் முகிழ்க்கும் ஓர்பால்.      139

     முல்லை நிலத்திலுள்ள குமிழ மலரையும், கடற்கரைச் சோலையிலுள்ள
தாழையின் பொன்னிற மலரையும் நிலம் சுமந்த மலை தன்னிடத்து மலர்ந்த
செங்காந்தள் மலர்மேல் இருபக்கமும் தாங்கி நின்று, சிவபெருமானுக்குரிய
மலரினை மோந்து தீங்கிழைத்த அரசரது பட்டத்துத் தேவியின் மூக்கினை
அரிந்து அவ்வுடை வாளொடு தமது கையிலேந்தி, அக்காலத்தில் வழிபாட்டு
முறையை நிலைபெறச் செய்த செருத்துணை நாயனார் அன்பின்வழி உறுதி
பெற நின்ற நிலையை உணர்த்திச் செல்வ நிலையைப் புலப்படுத்தி நிற்கும்
ஓர்பால்.

     குறிஞ்சி, முல்லை, நெய்தல்களின் மயக்கம் இது. ‘தறை’ எதுகை
நோக்கித் திரிந்தது. ‘தறையிடைப் படுத்துகின்றேன’ (திருத்தொ-எறி-).

     விண்முட்டுங் குடுமிவரைத் திகிரிபடும் வெண்முத்தும் வேலைச்
சூழல், மண்முட்ட நறும்புன்னை உகும்அரும்புந் தலைமயங்கி
அவற்றுட் சேர்ந்த, தண்முட்டை இதுவென்னப் பகுத்தறிய வல்லாது
தளர்வு கொண்டு, கண்முட்ட வளம்படைத்த வயல் அன்னந் துயர்
கூருங் காட்சித் தோர்பால்.                           140