அகத்திய முனிவர் காசியி னின்றும் போந்து கம்பர்தாம் அருளப் பெற்று மாசிலாக் கச்சி மூதூர் மன்னிவீற் றிருந்து பூமேல் ஆசிலாத் தமிழ்ப ரப்பி அருந்தமிழ்க் குரவு பூண்ட தேசினான் மலய வெற்பிற் குறுமுனி திருத்தாள் போற்றி 11 | காசியினின்றும் எழுந்தருளித் திருவேகம்பரருள்வாய்த்துக் குற்றமற்ற காஞ்சியில் நிலைபெறச் சிறப்புற இருந்து உலகில் களங்கமில்லாத தமிழைப் பரப்பி நல்லாசிரியத்தன்மை மேற்கொண்ட ஞானவடிவினரும் பொதியமலைக் குறுமுனிவரும் ஆகிய அகத்தியர்தம் திருவடிகள் காக்க! திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். மேற்படி வேறு பரசமய கோளரியைப் பாலறா வாயனைப்பூம் பழனஞ்சூழ்ந்த, சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேயமெல்லாம், குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்தம் குலதீ பத்தை, விரவிஎமை ஆளுடைய வென்றிமழ விளங்களிற்றை விரும்பி வாழ்வாம். 12 பரசமயம் நிராகரித்து நீறாக்கும் (நீற்றினை வளர்க்கும்) சிங்கமாய், ஞானப்பாலின் வடிவேயாகிய திருமுறைகளை இடையறாது ஓதியருளினமையின் பாலறாவாயராய், மகிழ்ச்சியால் குரவைக் கூத்தியற்றத் தமிழ் வேதம் விரித்த கவுணியர் குலவிளக்காய், சிரபுரமென்னும் சீகாழிப் பதியில் அவதரித்து எமைக் கலந்து ஆண்ட வென்றியையுடைய மழஇளங்களிறாய் விளங்கும் திருஞான சம்பந்தப் பெருமானை விரும்புதலின் வாழ்வோமாக! ‘பால் நல்வாய் ஒருபாலன்’ என்ற செம்பொருளும் ஆகும். திருநாவுக்கரசு நாயனார் மேற்படி வேறு இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவா ரத்திண், படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும், நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல், தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம். 13 முதிர்ந்து முறுகிய அன்பும், அதனைக் காட்டும் மழைபோலப் பொழியும் கண்களும், உழவாரப் பணி இடையறாது புரியும் படைஏந்திய திருக்கரமும், சித்த நிலை திரியாது திருவடியிற் பதிந்து மீளாத திருவுள்ளமும், ஒழுக்கம் பிறழாக் கடுந்துறவும், வீட்டிற்கு வாயில் எனும் தொடை |