வீராட்டகாசப் படலம் 513


     கருமையும், செம்மையும், வெண்ணிறமும் பொருந்திய நிறத்தினை
யுடைய அம்மையை, காமக்கோடி என்னும் தூய பிலாகாய வடிவியை,
அருவிகள் இழிகின்ற சிகரங்களையுடைய அழகிய இமாசலன் புதல்வியை,
மாயா காரியங்களையும் உலகுயிர்களையும் பயந்த அன்னையை உருகி
நெகிழ்ந்து உள்ளமாகிய பெரிய கோயிலுள் வெளிப்பட்டு விளங்கி
அடியேனின் உடம்பினை மூடியிருக்கும் இக்கரிய நிறமுடைய தோலைப்
போக்கிச் செந்நிறமுடைய மேனியை நல்கக் கருணை செய்க’ என்று
வழிபடலாயினள்.

     வருண னார்உனை வாருணி என்னப் பிருகு மாதவற் கருளிய
வாற்றால், பிருகு வாரநாள் உனைவழி படுவார் பெருவ ளத்தொடு
வாழ்வர்என் றுரைப்ப, அருவி னைப்புலக் குறும்பெறிந் துயர்ந்த
பிருகு மாமுனி மகள்அடி யேற்கும், கருணை செய்வது கடன்உனக்
கன்றே கருப்பு வில்லியைக் காய்ந்தவர்க் கினியாய்.            44

     ‘வருணன் தவத்தால் அடைந்தமையால் வாருணி என்னும் திருப்பெயர்
ஏற்ற நின்னைப் பெரிய மாதவராகிய பிருகு முனிவர்க்குற்ற தவமகளாகத்
தந்தமையால் வெள்ளிக்கிழமையில் உன்னை வழிபடுவார் பெருஞ்
செல்வத்துடன் வாழ்வர் என்று கூறுவர். விலக்குதற்குக் கூடாத
வினைக்காட்டினை வெட்டி யெறிந்துயர்ந்த பிருகு மாமுனிவரர் தவமகளே! 
மன்மதனை அழித்த சிவபெருமானார்க்கு இனிய அம்மே! அடியாளுக்கும்
கருணை வழங்குதல் உனக்குக் கடப்பாடாகும்.

     காஎ னப்பெய ரியகலை மகளை முந்தை ஞான்றுநின்
கண்ணெனப் புரந்தாய், மாஎ னப்பெய ருடையமற் றெனையும்
மலர்ந்த நின்விழி போற்புரந் தருளி, ஏஎ னப்பிறழ் தடங்கணாய்
காமக் கண்ணி யாம்பெயர் எய்துவை என்னாப், பூஎ னப்பயில்
அணைமிசைக் கிழத்தி போற்றி சைத்தலும் எதிரெழுந் தருளி.    45

     ‘கா’ எனப்பெயர் படைத்த சரசுவதியை முற்காலத்து நின் கண்ணாகக்
கொண்டு காத்தனை. ‘மா’ எனப் பெயர் பூண்ட அடியாளையும் மலர்ந்த
நின்னுடைய கண்ணைப் போன்று பாதுகாத்தருளி அம்பு போலக் கிடந்த
மேலும் கயல்போலப் பிறழ்கின்ற விசாலாட்சி! காமக் கண்ணி என்னும்
பெயர் எய்துவாய்’ என்று கூறி மலர்ந்த தவிசிலுறை திருமகள் ஏத்திசைத்த
அளவிலே எதிர்வந்தருளி,

திருமகள் வரம்பெறல்

     எம்பி ராட்டிவான் கருணைகூர்ந் தருளி ஏட விழ்ந்தபூந்
தவிசுறை அணங்கே, கம்பி யாதிமற் றுன்உடற் கருமை கரிய சாந்தமாக்
கழிகமுன் னையினும், நம்பு நல்லுருப் பெறுதிஇப் பொழுதே நார
ணற்குமிக் குரியவ ளாவாய், வம்ப றுத்தெழுந் தோங்கிஅண் ணாந்து
மதர்த்து வீங்கிய வனமுலைத் தோகாய்.                      46