குமரகோட்டப் படலம் 533


     அருள்வலியால் ஆங்கவனை விடுவித்தும் அஞ்சேன்மின் என்று
கூறித், திருநந்தி நாயகனை எதிர்நோக்கி அறுமுகன்பால் சென்று
முற்றுந், தருகின்றான் றனைவிடுமோ வெகுளேல்என் றெம்முரையாற்
சாற்றித் தேன்பாய், மருவொன்று மலரோனை விடுவித்து நம்மாட்டுக்
கொணர்தி என்றார்.                                       17

     பெருங் கருணை வலிமையால் அப்பிரமனைச் சிறைவீடு செய்வோம்.
அஞ்சலீர், என்றருளித் திருநந்தி நாயகனை நேர்நோக்கி’ ஆறுமுகன்பால்
சென்று முற்றும் படைப்போனை விட்டிடு வெகுளாதே. என்று எம்முடைய
வாக்காகக்கூறி விடுவித்துப் பிரமனை இங்குக் கொண்டு வருதி’ என்றேவினர்.

     வேத்திரத்திண் படையாளி விடைகொண்டு வேற்படையோன்
உலகம் நண்ணி, மாத்தடிந்த பெருமானைத் தொழுதிறைஞ்சி
எங்கோவே மழுவாள் எம்மான், பூத்தவிசிற் புத்தேளை நீவிடுமோ
றருள்செய்தான் என்று போற்றி, ஏத்தும்வழி அறுமுகவேள் இதழ்
அதுக்கி வெகுளுதலும் வெருவி மீண்டான்.                    18

     பிரம்புடைய நந்திதேவர் விடை பெற்றுச் சென்று கந்தலோகத்தை
அடைந்து சூரபன்மனாகிய மாமரத்தைப் பிளந்த பிரானாரைத் தொழுது
வணங்கி ‘எம்மரசே! மழுப்படை எம்மான் பிரமனை நீவிர் விடுமாறென்னை
விடுத்தனர். என்றுகூறிப் போற்றித் துதிசெய்யும் வழி ஆறுமுகப் பிரானார்
உதட்டை மென்று கோபங் கொள்ளுதலும் அஞ்சி மீண்டனர்.

     பிஞ்ஞகநின் திருவாணை விண்ணப்பஞ் செயச்சிறிதும் பேணா
னாகி, மஞ்ஞையான் சினவுதலின் வெரீஇப்பெயர்ந்தேன் எனநந்தி
வள்ளல்கூற, மொய்ஞ்ஞிமிறு முரல்பூந்தார்க் கடவுளரும் முனிவரருங்
கேட்டுத் தம்முள், கைஞ்ஞெரித்தார் வெருக்கொண்டார் இறையவனே
காவாய்என் றடியில் வீழ்ந்தார்.                            19

     ‘தலைக்கோலம் உடையோய்! நின்னுடைய திருவாணையை முறையிடச்
சிறிதும் போற்றாராய் மயிலேறும் பெருமானார் வெகுளுதலின், அஞ்சி
மீண்டேன்’ என்று திருநந்தி தேவர் விடைகூற மொய்க்கின்ற வண்டுகள்
ஒலிக்கின்ற மாலையை யணிந்த தேவரும், முனிவரும், கேட்டுத் தமக்குள்ளே
கையைப் பிசைந்து கொண்டனர்; அஞ்சினர். இறைவனே! காப்பாய்’ என்று
திருவடியில் வீழ்ந்தனர்.

     சயிலாதி வாய்மொழியும் சுரர்முனிவர் மனத்துயரும் தரைசால்
வெள்ளிக், கயிலாயத் தெம்பிரான் திருவுளத்திற் கொண்டருளிக்
கருணை கூர்ந்து, மயிலாலும் மலைமகளோ டெழுந் தங்கண்
மகவிருப்பால் எய்த நோக்கி, அயிலாளுந் திருக்கரத்தான்
விரைந்தெதிர்சென் றடிவணங்கிப் போற்றி நின்றான்.            20