540காஞ்சிப் புராணம்


ஆயி டைப்பி ராட்டியை அருச்சித் தேத்தி அருளினான்
மாயம் நீங்கி மெய்யுணர் வெய்திப் பஞ்ச வாவிநீர்
ஏயமூழ்கித் தேவசே னாப தீசத் தேகிஅந்
நாய னாரை விதியுளி நயந்து பூசை ஆற்றினான்.     41

     அங்குக் காமாட்சி தேவியை அருச்சனை செய்து அருள் பெற்று
மாயை நீங்கி மெய்யுணர்வைப் பெற்று உலகாணித் தீர்த்தத்தில் பொருந்த
மூழ்கித் தேவசேனாபதீச்சரப் பெருமானைச் சார்ந்து விதிப்படி விரும்பிப்
பூசனை புரிந்தனர்.

கருணை கூர்ந்து நம்பனார் காட்சிதந் தளித்தலும்
பரசி ஏத்தி நின்னடிப் பத்தி மாறி லாவரம்
அருள வேண்டும் மெய்த்தவர் அடியர் மாட்டு வஞ்சனை
ஒருக ணத்தும் எண்ணிடா உளம்எ னக்கு வேண்டுமால்.  42

     நம்பனார் காட்சி தரலும் பரவிப் போற்றி ‘நின்னடிக்கண் என்றுந்
திரிபில்லாத பேரன்பு வேண்டும். உண்மைத் தவமுடையார், அடியவர் ஆகிய
இன்னோர் மாட்டு வஞ்சகச் செயல் ஒருகண நேரமும் எண்ணாத உளமும்
எனக்கு வேண்டும்.’

ஈண்டு நின்பு தல்வனோ டெந்தை திருமுன் வைகவும்
வேண்டும் என்றி ரந்துவிண் ணப்பஞ் செய்ய வெண்பிறை
நீண்ட செஞ்ச டைப்பொதி நிரும லப்ப ரம்பொருள்
ஆண்ட கைப்பி ரான்மகிழ்ந் தன்ன வாக என்றுபின்,    43

     இங்கு நின் புதல்வராகிய முருகப்பிரானாருடன் சந்நிதியில் இருக்கவும்
அருள் செய்தல் வேண்டும். என்றிரந்து வேண்டப் புனிதனார் அவர்க்கு
அவற்றை வழங்கி, பின்பு,

என்றும் அன்பின் ஏகிநீ உருகும் உள்ளக் கோயிலான்
என்று நாமம் எய்துகென் றருளி இறைவன் நீங்கினான்
குன்றெ டுத்து முந்துகோ நிரைகள் காத்த குரிசிலும்
மன்றல் வெட்சி மாலையான் அருளின் அங்கண் வைகினான்.  44

     என்றும் பேரன்புடையனாய் ‘உருகும் உள்ளத்தான்’ என்று திருப்
பெயர் எய்துக’ என அருள் செய்து பெருமானார் திருவுருக்கரந்தனர்.
முன்னாள் கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு பசுக்களைக்
காத்த திருமாலும் மணமுடைய வெட்சி மாலையை அணிந்த முருகப்
பெருமான் அருளும் பெற் றவ்விடத்தே தங்கினர்.

கூறும் இனைய மேன்மைசால் குமர கோட்ட வைப்பினிற்
பாறு நச்சு வேலினான் பாதம் அங்கி அநிலநாள்
வேறு நாற்றி னங்களில் விரும்பிச் சென்றி றைஞ்சினோர்
பேறு முற்றும் யாவரே பேச வல்ல நீர்மையார்.         45