மாசாத்தன்தளிப் படலம் 543


வேல்விழி மாதர்யான் வீழ்ந்து ளார்பெறச்
சாலநல் குவல்என்ச் சலதிச் சேக்கைவாழ்
வால்வளைக் குடங்கையான் மகிழக் கூறலும்
கோல்வளைத் திதிமைந்தர் குறித்து நோக்கினார்.    7

     ‘வேலை ஒக்கும் விழியினை யுடைய மாதராகிய யான் விரும்பியோர்
பெறுமாறு அமையக் கொடுப்பேன்’ என்று கடலை இருக்கை கொண்டு
வாழும் வெள்ளிய பாஞ்ச சன்னியத்தை அகங்கையிற் கொண்ட திருமால்,
திரண்ட வளையினை அணிந்த திதி மைந்தராகிய அசுரர் மனமகிழும்படி
உரைத்தலும் அவர்கள் மோகினியின் உறுப்பழகை ஊன்றி நோக்கினர்.

மோகினியின் முற்றுருவப் புனைவு

எழுசீரடி ஆசிரிய விருத்தம்

     கலிதிரை முகந்த சூல்முகில் விளர்ப்பக் கடைகுழன்
றிருண்டுநெய்த் தொழுகிப், பொலிவுற மகரம் வலம்புரி திருத்தி
எஃகிடை தொட்டபூங் குழலைக், குலிகநீர் அளவி மழவிளம் பரிதிக்
குரூஉச்சுடர் உரிஞ்சிய காட்சி, இலகொளித் தேய்வை அரும்பெறல்
திலகம் இட்டகீற் றிளம்பிறை நுதலை.                        8

     கடல் நீரைப் பருகிய கருக்கொண்ட மேகம் வெளிறுபட இருண்டு
கடை வளைந்து நெய்யால் ஈரிதாய் நீண்டு விளக்கம் பெறச் சுறாமீன்
வலம்புரி ஆகிய இவற்றின் வடிவுடைய அணிகளை உரிய இடங்களில்
இருத்தப் பெற்று மகிழ்ந்து இடையைத் தொட்டு நீண்ட மலரையுடைய
கூந்தலையும், குலிக நீரைக் கலந்து மிக்கிளைய சூரியனின் செந்நிற
முடைய சுடர் தங்கிய தோற்றமுடைத்தாய் ஒளியுடைய தேய்த்துக் கொண்ட
சந்தனத்தால் ஆகிய பிறிதொன்றற்கில்லாத சிறப்புடைய திலகம் தீட்டிய
இளம்பிறைக் கீற்றினை ஒத்த நெற்றியையும்,

     மாற்றரு மதுகை ஐங்கணைக் கிழவன் வாங்கிய நறுஞ் சுவைத்
தேறல், காற்றுவெஞ் சிலைக்குச் சிலைத்தொழில் பயிற்றுங் கட்டெழிற்
புருவமென் கொடியைச், சீற்றவல் விடமும் அமிழ்தமும் விரவிச்
சிதர்அரி பரந்துமை தோய்ந்து, கூற்றர சிருக்கும் இணைவிழி களவு
கொள்ளநோக் கிடுஞ்சிறு நோக்கை.                         9

     வெல்லற்கு அரிய வலியமைந்த ஐந்து மலரம்புகளுக் குரிய மன்மதன்
வளைத்த நறிய சுவையையுடைய சாற்றினை உமிழும் கரும்பாகிய கொடிய
வில்லிற்கு விற்றொழிலைக் கற்பிக்கும் பேரெழிலுடைய புருவமாகிய மெல்லிய
ஒழுங்கையும், பொங்கி யெழுகின்ற கொடிய விடமும் அமிழ்தமும் கலந்து
சிதர்ந்த வரிகள் பரவி மையுண்டு கொலைத் தொழிலையுடைய யமன் அரசு
புரியும் இருவிழிகளும் நோக்கப் பெற்றோர் தம் அறிவு முதலியவற்றைக்
களவு கொள்ளக் காணும் சுருங்கிய நோக்கையும்,