பூசனை என்னிற் சிவலிங்க பூசனையே ஆகும். ஒளியமைந்த அப்பூசனையும் புகழ்ச்சியமைந்த குற்றமற்ற தலங்களிற் செயற்குரிய ஆகும். அத்தலங்களின் மிக்கது காசி. அக்காசியினும் காஞ்சி மிக்கது. கண்ணகன் புரிசைசூழ் காஞ்சி வைப்பிடைப் புண்ணியச் சிவக்குறி நிறுவிப் பூசித்து விண்ணவர் தவமுனி வேந்தர் யாவரும் எண்ணரும் பேறுபெற் றின்பம் நீடினார். 28 | இடங்கொண்ட மதில் சூழ்ந்த காஞ்சி நகர்க்கண் புண்ணியத்தைத் தருகின்ற சிவலிங்கம் நிறுவிப் பூசித்து விண்ணோரும், முனிவரரும், அரசரும், பிறரும் எண்ணரிய வரங்களைப் பெற்று இன்பத்தில் நிலைத்தனர். ஆயிடை நீஎமை அருச்சித் தேத்துதி மாயிருந் தலைமைநாம் வழங்கு கேமெனச் சேயிழை பங்கினான் அருளிச் செய்தனன் காயிலைப் படையவன் காஞ்சி நண்ணினான். 29 | ‘அங்கு நீ எம்மை அருச்சனைசெய். மிகப் பெருந்தலைமை நாம் வழங்குவோம்’ என்று சேயிழையாளைப் பாகங்கொண்டவர் அருளினர். வெல்லுகின்ற இலையை ஒக்கும் படையினராகிய சாத்தனாரும் காஞ்சியை நண்ணினர். உருகெழு பனிவரைப் பிராட்டி ஒண்மலர்த் திருவடிச் சுவடுதோய் செல்வக் காஞ்சியின் மருவிவேற் கடவுளை வழுத்தி ஆங்கவன் அருளினாற் சிவக்குறி நிறுவி அர்ச்சித்தான். 30 | வடிவுடைய அம்மையார் திருவடிகளின் சுவடுகள் பதிந்த செல்வத்தைப் பெற்ற காஞ்சியில் குமரகோட்டப் பிரானைப் போற்றி அவரருளைப் பெற்றுப் பின்பு சிவலிங்கம் இருத்தி அருச்சனைப் புரிந்தனர். மறைமுதல் விடைமிசைத் தோன்றி மற்றவற் கறைகழல் இமையவர் அருகு சூழ்தர முறைகெழு பூதங்கள் முழுதுங் காப்புறும் இறைமையின் மணிமுடி இனிது சூட்டினான். 31 | வேதமுதல்வர் விடைமேற் றோன்றித் தேவர் சூழப் பூத கணங்களைக் காவல் செய்யும் தலைமைக் குரிய மணிமுடியை இனிதுபடச் சூட்டினர். |