திருவேகம்பப் படலம் 567


அவ்வண்ணம் அருளிச் செய்யக் கேட்டவர் அறைத லுற்றார்
கவ்வெனுங் கமலத் தோனும் அவ்வெனுங் கரிய மாலும்
மவ்வெனும் அரனு மாய மற்றெமை விழியின் ஈன்ற
இவ்வன்னை காமக் கண்ணி எனப்பெயர் பெறுக மன்னோ.  23

     அவ்வாறு அருளுதலைச் செவியேற்றுத் தேவர் மூவரும், ‘க’ என்னும்
சொற்பொருளாகிய அரனும், ‘அ’ என்னும் சொற்பொருளாகிய திருமாலும்,
‘ம’ என்னும் பெயர்ப் பொருளாம் உருத்திரனுமாகிய எம்மைத் திருவிழிகளிற்
றோற்றுவித்த இவ்வன்னையார் காமக் கண்ணி எனும் பெயராற் பொலிவுறுக.’’

     வீராட்டகாசப்படலம் 38ஆம் செய்யுளைக் காண்க,

சேந்தமென் தளிர்கள் கோதித் தீங்குயில் இனிது கூவும்
ஏந்திணர்ச் சாகை தோறும் இளநறா ஒழுக்கி வாசப்
பூந்துகள் உகுத்துச் சீதப் புதுநிழல் விரிக்குந் தெய்வ
மாந்தரு வடியின் நீவிர் வைகலும் வதிக என்றார்.   24

     ‘‘சிவந்த மெல்லிய தளிர்களைக் கொழுதி இனிய குயில் கேட்போர்க்கு
இன்பம் உண்டாகக் கூவுதற்கிடனாகிய ஏந்திய பூங்கொத்துக் களையுடைய
கிளைகள் தோறும் பசுந்தேனைத்துளித்து மணமுடைய மகரந்தப் பொடியைச்
சிந்திக் குளிர்ச்சி பொருந்திய புதிய நிழலைப் பரப்பும் தெய்வத்தன்மை
யுடைய மாமரத்தின் அடியில் நீவிர் எந்நாளும் வீற்றிருக்க” என வேண்டினர்.

தவளவெண்ணீற்று மேனித் தலைவன் அவ் வரங்கள் நல்கி
இவறிமற் றவர்கள் மீட்டும் இணைக்கரங் குவித்து வேண்டப்
புவனம்ஓர் மூன்றும் உய்யப் புதுநிழல் மாவின் மூலத்
தவிர்ஒளி மயமாய்த் தோன்றும் அருட்குறி மேன்மை விள்ளும்.  25

     மிக்க வெள்ளிய திருநீற்றினை மேனியிற் றாங்கிய தலைவராகிய
திருவேகம்பர் அவ்வரங்களை வழங்கியபின், மேலும் அம்மூவரும் விரும்பிக்
கைகளை அஞ்சலி செய்து வேண்டதலின் ஒப்பற்ற மூவுலகங்களும் போற்றிப்
பிழைக்குமாறு புதிய நிழலையுடைய மாவின் அடியில் விளங்குகின்ற
ஒளிவடிவாய்த் தோன்றும் சோதிலிங்கத்தின் சிறப்பினைத் திருவாய் மலர்வர்.

திருவேகம்பப் பெயர்மாட்சி

எண்சீரடி யாசிரிய விருத்தம்

     இன்னி சைச்சுரும் புளர்மலர்த் தொடையல் இணங்கு
தோட்டுணை மைந்தர்காள் கேண்மின், மன்னு ருத்திரன், ஒருவனே
பிரமம் ஒன்று மற்றிலை என்பது துணிபால், பன்னு மெய்ப்பொருட்
பிரமமாம் வேதம் ஒற்றை மாவெனப் பணைத்தது கண்டீர், அன்ன
தற்கிறை யாகிய யாமே இலிங்க மாய்அதன் அடித்தலத் துறைகேம். 26