திருவேகம்பப் படலம் 571


     மூங்கிலை ஒக்கும் பருத்த தோளும், தோகையையுடைய மயிலின்
சாயலும் அழகும் உடைய மகளிருடைய கொப்பூழிடத்தைக் ‘காஞ்சி’ எனக்
கூறுவர். திரைகள் மறித் துலவும் கடலை ஆடையாகவுடைய பூமி தேவிக்குக்
காஞ்சி நகரம் நாபியாய்ப் பொலிதலானும் அப் பெயர் சிறக்கும்.

     மற்றுங் கவ்வெனல் சென்னியோ டின்ப மலர வன்றனை
உணர்த்தும்அஞ் சித்தல், சொற்ற பூசனை அடைவுமாம் யாருஞ்
சென்னி மேற்கொடு தொழத்தகுஞ் சிறப்பால், பற்றி வைகுநர்
பேரின்பம் உறலாற் பங்க யத்தவன் வழிபட லானும், பெற்ற
தாகும்இத் திருப்பெயர் இதனாற் பிரம லோகம்என் றுரைக்கவும்
படுமால்.                                              36

     ‘க’ எனின், சிரம், இன்பம், பிரமன் என்னும் பொருள்களைப் பயக்கும்.
அஞ்சித்தல் பூசித்தலின் பொருளைப் பயக்கும். யாவரும் சிரமேற் கொண்டு
போற்றத்தகுஞ் சிறப்பின தாய்க் கடைப் பிடிப்போர் பேரின்பத்தைப்
பெறுதலானும், பிரமன் வழிபடலானும், ‘காஞ்சி’ எனப் பெறும். இதனாற்
பிரமபுரம் எனவும் பேசப் பெறும்.

     வீடு பேற்றினர் தேவர்என் றுரைப்ப விழையும் இந்நகர்
வரைப்பிடை வீடு, கூடும் வாழ்க்கையர் நிறைதலின் தேவ
புரமெனப்படுங் கொடுவினைத் திறத்தால், பாடு சான்றபோர்
புரிவருந் தகவின் அயோத்தி என்னவும் பகரும்இந் நகரம், நீடு
மன்னவர் உறைதரும் அயோத்தி நிகழும் முத்தருக் குறைஇடம்
அன்றால்.                                             37

     வீடு பெற்றுத் தெய்வத்தன்மை உடையோர், தேவர் எனப்புலவரால்
போற்றப் பெறுவர். இந்நகர்க்கண் வீடுபேற்றிற்குரிய அதிகாரிகள்
நிறைந்துறைதலின் ‘தேவபுரம்’ எனக்கூறப்படும். கொடிய தீவினை வலி
தாக்குதலாகாமைக்கு இடனாகலின் இந்நகரம் அயோத்தி எனப்பெறும்.
மன்னர் உறையும் இடமாய்ப் பகைவர் போர் செயற்குக் கூடாத
அயோத்தியினும் வினை போர் புரியலாகாத சீவன் முத்தருறையும் இடமாம்
அயோத்தியாகிய இந்நகர் ஏற்றமுடைத் தென்க.

     யோத்தி-போர் செய்யப்படுவது; அ, எதிர்மறை.

     சுவர்க்கம் எய்தினர் தேவர்என் றோதுஞ் சுருதி யால்அது
நாகநாடன்று, நவிற்று ருத்திர லோகமே சுவர்க்க மாகும் ஆதலின்
நலங்கெழுஞ் சோதி, நிவக்கும் என்றிடும் அயோத்திநீள் பிரமலோகம்
நீடொளித் தேவமா புரமும், புவிக்குள் மேதகு காஞ்சியே யன்றிப்
புவனம் மூன்றினும் வேறிலை கண்டீர்.                       38

     ‘சுவர்க்கத்தை எய்தினவர் தேவர் என்று வேதம் கூறும். விண்ணவர்
நாட்டைக் குறிப்பதன்று அது; சிவலோகமே உண்மையிற் சுவர்க்கமாகும்.
ஆதலால், நன்மை கெழுமிய சோதி மேம்படும் எனப்