மாறி லாமறை எமதுவா சகமாம் வாசகத்தொடு வாச்சியந் தனக்கு, வேறு பாடில்லை ஆதலின் எமக்கும் இனைய மாவிற்கும் வேறுபா டில்லை, ஈறி லாஇதன் மூலத்தின் என்றும் இலிங்க மூர்த்தியாய் உறைகுதும் நெருநல், காறும் யாவரும் கண்டிலர் இந்நாட் கவுரியோடுநீர் காணவீற் றிருந்தேம். 42 முன்னொடு பின் முரணில்லாத வேதம் எம்மைப் பொருளாக உடைய நூல். சொல்லுக்கும் பொருளுக்கும் ஒற்றுமையுண்மையின் எமக்கும் இம்மாவினுக்கும் வேற்றுமையில்லை. அழிவில்லாத இதன் அடியில் சிவலிங்கவடிவில் என்றும் வைகுவோம். நேற்று வரையிலும் ஒருவர்க்கும் காணப் படாத யாம் இன்று நீர் கண்டு வழிபட உமையம்மையோடும் வீற்றிருக்கின்றேம். அகில நாமமும் எமக்குரிப் பெயராம் அவற்றி னும்பவன் முதற்பெயர் சிறப்பாத், தகும்அ வற்றினுஞ் சம்புவே மயோபு சங்க ரன்மயக் கரன்சிவன் மற்றை, இகழ ருஞ்சிவ தரனெனும் பெயர்கள் இனிய வாகும்அங் கெவற்றினும் மேலாய்ப், புகழ்ப் படைத்தஏ காம்பர நாதன் எனப்பு கல்பெயர் எமக்குமிக் கினிதாம். 43 எல்லாப் பெயரும் எமக்குரியனவே ஆயினும் பவன் முதலாம் திருப்பெயர்கள் சிறப்புடையன. அவற்றினும் சம்பு, மயோபு, சங்கரன், மயக்கரன், சிவன், போற்றப் பெறும் சிவதரன் என்னும் திருநாமங்கள் ஏற்ற முடையன. எவற்றினும் மிக்கதாய்ப் புகழ் படைத்த ஏகாம்பர நாதன் எனப் பெறும் பெயர் எமக்கு மிகவும் இன்பந்தருவதாகும். இன்ன தன்மையிற் கான்முளை முதலோர்க் கித்தி ருப்பெயரிட்டழைப் பவர்க்குத், துன்னும் வல்வினை முழுவதும் அகலத் தொலைத்து முத்தியும் செல்வமும், அளிப்போம், பன்ன ருந்தனி மந்தணம் உமக்குப் பகர்ந்து ளேமெனப் பண்ணவன் இறுப்ப, அன்ன மூவரும் உவகைமீக் கிளைப்ப அம்மை அப்பரை வணங்கிவே றுரைப்பார். 44 இவ்வியல்பினால் மக்கள் முதலோருக்கு இத்திருப் பெயரைச் சூட்டி வழங்குவோர்க்குச் செறியும் கொடிய வினைகளை முற்றவும் கெடுத்துப் பேரின்பத்தையும் வழங்குவோம். சொல்லலாகாத இரகசியத்தைத் திருவாய்மலர்ந்தோம் எனச் சிவபிரான் அருள அம்மூவரும் மகிழ்ச்சி மீக்கூர்ந்து அம்மை அப்பரை வணங்கி வேண்டுவார். கம்பாநதி மாட்சி எழுசீரடி யாசிரிய விருத்தம் கன்னி மாநதி கம்பை ஒன்றிவண் உள்ள தென்றருள் செய்தனை; இன்ன காரணம் என்று தேறிலம் இறைவ னேஎன எம்பிரான், முன்னெ ழுந்து மதர்த்து வீங்கி முகிழ்த்த மென்முலை அம்பிகை, தன்னை நோக்கி மகிழ்ந்து மைந்தர்கள் கேண்மின் என்றது சாற்றுவான். 45 |