574காஞ்சிப் புராணம்


     ‘அழிவில்லாத கம்பாநதி ஒன்றுள்ளது இங்கு என்றருள் செய்தீர். அது
புலப்படாமைக்குக் காரணம் அறிகிலோம். (அதனை அறிவித்தல் வேண்டும்)
பெருமானே!’ என வேண்டப் பெருமான் அம்மையார் திருமுகத்தை நோக்கி
உவகை மீக்கூர்ந்து (மும்மூர்த்திகளை) ‘மக்களே! கேளுங்கள்’ என
விரித்தருள்வார்.

வடிவம் எட்டு நமக்க மைந்தன மறைஉரைக்கும் அவற்றுள்ஓர்
வடிவ மாம்புனல் உலகெ லாம்இது தூய்மை செய்யும் வனப்பது
வடிவம் உற்றவர் உயிர்த ளிர்ப்ப வழங்குமற்றிது மாநதி
வடிவுகொண்டிவண் ஒழுகு கின்றது மன்னுயிர்த்தொகைஉய்யவே.

     அட்ட மூர்த்தங்கள் நமக்கு அமைந்தன ஆகும். வேதங்கள் புகழும்
அவற்றுள் நீர் ஓர் வடிவமாகும். உல குயிர்களின் அழுக்கைப் போக்கித்
தூய்மை செய்யும் சிறப்பினது. பிறந்தோர் உயிர்தழைக்குமாறு அருளும்
இது நதி வடிவாய் உயிர்கள் நற்கதியை அடையுமாறு ஓடும்.

இந்ந திப்புனல் எம்மை நேர்வர யார்வி ழிக்கும் அகப்படா
துன்ன ருஞ்சிவ யோக சிந்தையுள் யாம்உ றைந்திடு மாறுபோல்
வன்னி லத்தின் அகத்து வார்ந்து வழங்கு கின்றது காண்மினோ
கன்னி யாறிது கம்பை என்றொரு காரணப்பெயர் பெற்றதே.    47

     ‘இந்நதி நீர் எம்மைப்போல யாவர்கண்ணிற்கும் புலப்படாது. யாம்
சிவயோகியர் சிந்தையுள் உறையுமாறுபோல நிலத்தினுள் அந்தர் வாகினி
யாய்ச் செலவுடையது. அதனைக் காணுங்கோள். கம்பை நதி என்னும்
காரணப் பெயரைப் பெற்றது இது.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

பன்னுபா என்றல் தூய்மை பருகுதல் காப்புங் கூறும்
கன்னிவான் கங்கை யாதி கம்மெனும் புனல்கள் தம்பால்
துன்னிமூழ் குநர்வெம் பாவத் தொகுதிமெய் அழுக்குந் தீரத்
தன்னிடை முழுகித் தூய்மை தாங்கலாற் கம்பை என்ப.    48

     பேசப்பெறும் பா என்னும் சொற்குப் பொருள் தூய்மை. பருகுதல்,
காத்தல் என்பன ஆகும். ‘கம்’ என்னும் சொற் பொருளாகிய நீர்கள் (கங்கை
முதலியன) தம்மிடத்து மூழ்கியோர் பாவச் சுமைகளையும் அழுக்கையும்
போக்கிக் கொள்ளத் தன்கண் மூழ்கிப் புனிதம் அடைதலால் கம்பை என்று
கூறுவோர் உணர்ந்தோர்.

கம்மெனுஞ் சிரமேல் தீண்டின் தூய்மைசேர் கவினால் உண்டோர்
கம்மெனும் ஆவி தம்மைக் காத்தலான் மூழ்கி னோரைக்
கம்மெனும் பெருவீட் டின்பம் நுகர்விக்குங் காட்சி யானும்
கன்மநோய் அறுக்கும் இந்தத் தடநதி கம்பை யாமால்.      49